தம்பதி மீது மிளகாய் பொடி தூவி தாக்குதல் - பெண்ணை கத்தியால் 8 இடங்களில் குத்திய மர்ம நபர்கள்

ஆரணி அருகே இருசக்கர வாகனத்தில் கணவன், மனைவி சென்ற நிலையில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் அந்த பெண்ணை கத்தியால் குத்திவிட்டு தப்பினர்.
தம்பதி மீது மிளகாய் பொடி தூவி தாக்குதல் - பெண்ணை கத்தியால் 8 இடங்களில் குத்திய மர்ம நபர்கள்
x
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த சந்தோஷ் - ஜெயந்தி தம்பதிக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு அமரேஷ்  என்ற மகனும், காவ்யா என்ற மகளும் உள்ளனர். சென்னையில் வசித்து வந்த சந்தோஷ் - ஜெயந்தி தம்பதி தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் சொந்த கிராமமான அம்மாபாளையம் சென்று தங்கியிருந்தனர்.

நேற்று பிற்பகல் 3 மணியளவில் ஆரணி அடுத்த களம்பூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சந்தோஷ் - ஜெயந்தி தம்பதி சென்று விட்டு மீண்டும் இரவு வீட்டிற்கு புறப்பட்டனர். ஆரணி - வேலூர் சாலையில் உள்ள அம்மாபாளையம் ஏரிக்கரை அருகில் சென்று கொண்டிருந்த அவர்கள் மீது மர்மநபர்கள் திடீரென மிளகாய் பொடியை தூவியுள்ளனர். இதனால் நிலை குலைந்த சூழலில் ஜெயந்தி மீது அந்த மர்ம நபர்கள் கொடூர தாக்குதல் நடத்தியதுடன் மறைத்து வைத்திருந்த கத்தியால் 8 இடங்களில் குத்திவிட்டு தப்பினர்.

இதனால் கணவர் சந்தோஷ், அதிர்ச்சியில் உறைந்தார். இந்தச் சம்பவத்தில் ஜெயந்தி படுகாயமடைந்த நிலையில், தகவலறிந்த கிராம மக்கள் அவரை சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன் கண்முன்னே மனைவியை 8 இடங்களில் மர்ம நபர்கள் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்