பணம் தராத ஆத்திரத்தில் மூதாட்டி கொலை - உணவில் விஷம் வைத்து கொன்ற உறவினர்

பணம் தராத ஆத்திரத்தில் 80 வயது மூதாட்டியை உறவினரே விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் நெல்லையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
x
நெல்லை மாவட்டம், தியாகராஜ நகரை அடுத்த ராஜகோபால புரத்தை சேர்ந்தவர் 80 வயதான மூதாட்டி வெள்ளையம்மாள்.  இளம் வயதிலேயே கணவரை பிரிந்த அவர், தமது அண்ணன் மகன் தேவராஜன் வீட்டில் வசித்து வந்தார்.

வெள்ளையம்மாள், பெயரில் ஏராளமான சொத்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீடு கட்டுவதற்காக தேவராஜன் 60 லட்சம் ரூபாயும், அவரது சகோதரர் கனகராஜ்  20 லட்சம் ரூபாயும் மூதாட்டியிடமிருந்து பெற்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மூதாட்டி பெயரில் உள்ள  சொத்துக்களை பிரித்துக் கொடுக்க வேண்டும் என உறவினர்கள் தேவராஜனிடம் வலியுறுத்தி வந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் இடையே வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துக்கு பின்னர், இரண்டு நாட்களில் மூதாட்டி வெள்ளையம்மாள் உயிரிழந்தார். இந்த திடீர் மரணம் உறவினர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியதால், போலீசில் புகார் அளித்தனர்.

இந்த நிலையில், மூதாட்டியின் உடற்கூறு ஆய்வில், அவர் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.இதனையடுத்து, போலீசாரின் தீவிர விசாரணையில்,  தமது சொந்த அத்தையை  தேவராஜன் விஷம் வைத்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார்,  பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். வெளிநாட்டில் உள்ள தேவராஜனின் மகன் ஜான் பிரகாஷ் இந்தியாவிற்கு திரும்ப வர காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.பணம் தராத ஆத்திரத்தில், வயதான உறவினரை  கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  



Next Story

மேலும் செய்திகள்