சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. யின் மேல்முறையீட்டு மனு - பதில் மனு அளிக்க பொன் மாணிக்கவேலுக்கு 3 வாரம் அவகாசம்
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி அபய் குமார் சிங்கின் மேல்முறையீட்டு மனு தொடர்பாக பதில் அளிக்க பொன் மாணிக்கவேலுக்கு 3 வாரம் காலஅவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசுக்கு எதிராக பொன் மாணிக்கவேல் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்யக்கோரி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி அபய் குமார் சிங் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இதன் மீதான விசாரணை நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என பொன்.மாணிக்கவேல் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் முத்துக்குமார் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து 3 வார காலம் அவகாசம் அளித்து உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. பணி நீட்டிப்பு காலம் முடிந்ததால், சிலை கடத்தல் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஒப்படைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், ஒப்படைக்காததால் பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக அபய்குமார் சிங் தொடர்ந்த அவமதிப்பு வழக்கையும் இணைத்து விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்த வழக்கை தனியாக விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
Next Story