அடையாறு கொள்ளையில் 4 பேர் அதிரடி கைது

சென்னையில், மருத்துவர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக, 200 சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, கொள்ளையர்களை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
அடையாறு கொள்ளையில் 4 பேர் அதிரடி கைது
x
கடந்த 15ம் தேதி அடையாறில், மருத்துவர் ராஜேந்திரன் என்பவர் வீட்டில், 20 சவரன் தங்க நகை கொள்ளை போனது. இது குறித்து ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில், அடையாறு குற்றப்பிரிவு ஆய்வாளர் தாமோதரன் தலைமையிலான தனிப்படை போலீசார், கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர். அடையாறில் ஆரம்பித்த தேடுதல் வேட்டை, மத்திய கைலாஷ், கிண்டி, தியாகராய நகர், நந்தனம், கோடம்பாக்கம், வடபழனி, சூளைமேடு வரை தொடர்ந்தது. 200-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, வடபழனி கங்கையம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில், கொள்ளையர்கள் பதுங்கியிருப்பதை தெரிந்து கொண்ட போலீசார், அங்கு சென்று பார்த்திபன் என்பவரை கைது செய்தனர். பின்னர், பார்த்திபன் அளித்த தகவலின் அடிப்படையில், கோடம்பாக்கத்தை சேர்ந்த சாய் கிருஷ்ணன், நிர்மல், வடபழனி பிரபாகரன் என மேலும் 3 பேர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 30 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஏற்கனவே இவர்கள் மீது சூளைமேடு, திருவேற்காடு, கோடம்பாக்கம், அசோக் நகர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் 10 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 



Next Story

மேலும் செய்திகள்