உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் பொன் மாணிக்கவேல் பதவி குறித்து உத்தரவு பிறப்பிக்க முடியாது" - உயர்நீதிமன்றம்

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், பொன்.மாணிக்கவேலின் பதவி காலம் நீட்டிப்பு தொடர்பாக எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் பொன் மாணிக்கவேல் பதவி குறித்து உத்தரவு பிறப்பிக்க முடியாது - உயர்நீதிமன்றம்
x
தமிழக அரசுக்கு எதிராக பொன் மாணிக்கவேல் தொடர்ந்த வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்  பொன்மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக நியமித்தது தொடர்பாக அடுத்த உத்தரவு வரும் வரை அவரே பணியில் நீடிப்பார் என கூறினர். மேலும், பதவி நீட்டிப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் மனு மீதான விசாரணையை  டிசம்பர் 6 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.  பதவிக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக உயர் நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தை நாடலாம்  எனவும் நீதிபதிகள்  தெரிவித்தனர். 

"விசாரணை செலவை பெற கடிதம் அனுப்பியும் பதில் இல்லை" - தமிழக அரசு மீது பொன்மாணிக்கவேல் குற்றச்சாட்டு

விசாரணை செலவை வழங்க கோரி கடிதம் அனுப்பியும் தமிழக அரசிடம் இருந்தும் பதில் இல்லை என்று சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

சிலைக் கடத்தல் வழக்குகளில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி,  தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பொன் மாணிக்கவேல் கடந்த ஓராண்டில்  மேற்கொண்ட பணிகள் குறித்த அறிக்கையை  தாக்கல் செய்தார்.

அதில், தன் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு, 116 வழக்குகளில் தகவல்களை திரட்டி,  59 வழக்குகளில் 110 சிலைகள் திருடப்பட்டிருப்பது கண்டறிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாரம்பரிய சிலைகள் மீட்பு மற்றும் அதை சோதனையிடுவதில் தமிழக அரசு போதிய விருப்பம் காட்டுவதில்லை எனவும்,  தங்களுடைய விசாரணைக்கு ஒத்துழைத்த இந்து அறநிலைய துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

தங்களின் விசாரணைக்கான வாகன செலவு, வெளிநாடு சென்று விசாரிப்பதற்கான போக்குவரத்து செலவுகளை வழங்க கோரி கடிதம் அளித்தும் இதுவரை அரசு தரப்பில் பதில் அளிப்பதில்லை எனவும் அதில் பொன் மாணிக்கவேல் குற்றஞ்சாட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்