வரதட்சணை கொடுமையால் கர்ப்பிணி தீயில் கருகி மரணம்-கணவன் தீ வைத்து கொலை செய்ததாக குற்றசாட்டு

கர்ப்பிணி பெண் தீயில் கருகி உயிரிழந்த சம்பவத்தில், கணவன் கொலை செய்துவிட்டதாக குற்றம்சாட்டிய உறவினர்கள், போலீசார் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக கூறி சாலை மறியலில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
x
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரை சேர்ந்த கஜேந்திரன், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நாகலட்சுமிக்கு 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்க ஒன்றரை வயதில் குழந்தை ஒன்று உள்ளது. 6 மாத கர்ப்பிணியாக இருந்த நாகலெட்சுமி கணவனுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக தந்தை வீட்டுக்கு சென்றார். பின்னர் பல்வேறு சமாதானங்களுக்கு பிறகு சிலநாள் முன்பு கணவன் வீட்டுக்கு திரும்பியுள்ளார்.  இந்நிலையில் அவர் இறந்து விட்டதாக நாகலெட்சுமியின் வீட்டுக்கு கணவன் வீட்டார் தகவல் அளித்துள்ளனர்.  நாகலெட்சுமி தற்கொலை செய்துகொண்டதாக கடந்த வெள்ளிக் கிழமை தகவல் சொல்லப்பட்டது. ஆனால் வியாழன் அன்றே அந்தச் சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. தீயில் கருகிய நாகலெட்சுமியை மீட்ட அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். 2 நாள் சிகிச்சைக்கு பின் சிகிச்சை பலனின்றி நாகலெட்சுமி உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த நாகலெட்சுமியின் உறவினர்கள் அவர் தற்கொலை செய்யவில்லை என்றும் வரதட்சனை கேட்டு கொடுமை படுத்திய கணவன் கஜேந்திரன்  மனைவியை தீ வைத்து கொலை செய்துள்ளதாகவும் ஒன்றரை வயது குழந்தையுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். சமாதானம் பேசிய போலீசாரிடம் எப்.ஐ.ஆர் போடாதது குறித்து கேள்வி எழுப்பியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நாகலட்சுமி மரணத்திற்கு காரணமானவர்களை போலீசார் கண்டுபிடிக்க வேண்டும் என அவரது உறவினர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். போராட்டம் தள்ளுமுள்ளு காரணமாக அங்கு பதற்றமான சூழல் நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்