முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் கூட்டம், சேலத்தில் வரும் திங்கட்கிழமை நடைபெறுகிறது
சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை, சேலத்தில் நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைக்கிறார்.
கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் நேரடியாக சென்று, மக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காணும் வகையில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என கடந்த ஜூலை மாதம் 18 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில், 110-வது விதியின் கீழ் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, நாளை சேலம் மாவட்டம் வனவாசி அரசுப் பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை தொடங்கிவைக்கிறார். அங்கு பொதுமக்களிடம் மனுக்களை பெறுவதோடு, அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். இத்திட்டம் மூலம் அனைத்து நகரப்புற வார்டுகள் மற்றும் கிராமங்களில் வருவாய், ஊரக வளர்ச்சி உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அலுவலர் குழு ஆகஸ்ட் மாத இறுதிக்குள் நேரடியாக சென்று மனுக்களை பெறும். அதனை தொடர்ந்து அம்மனுக்கள் ஒரு வார காலத்திற்குள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு, ஒரு மாத காலத்திற்குள் தீர்வு எட்டப்படும்.
Next Story