கஜா புயல் - மறியலில் ஈடுபட்ட 140 பேர் மீதான வழக்கு ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
கஜா புயலின் போது நிவாரணம் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டதாக 140 பேர் மீது தொடரப்பட்ட வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கஜா புயலால் நாகை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்நிலையில் வேதாரண்யம் தலைஞாயிறு பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள், நிவாரணம் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது, பொதுச்சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டது.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டதாக 140 பேர் மீது தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணை, வேதாரண்யம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. இந்நிலையில், இந்த வழக்குகளின் விசாரணைக்கு தடை விதிக்க கோரி 140 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளின் இறுதி விசாரணை இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நடைபெற்றது. இதில், சாலை மறியலில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்குகளை நீதிபதி ரத்து செய்து உத்தரவிட்டார். அதே நேரத்தில் மறியலின் போது, பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக 60 பேர் மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய மறுத்து, விசாரணைக்கு தடை கோரிய மனுக்களை தள்ளுபடி செய்தார்.
Next Story