சரவணபவன் ராஜகோபால் உடல்நிலை கவலைக்கிடம்

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சரவணபவன் ஒட்டல் அதிபர் ராஜகோபாலின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
x
ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில், சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இந்நிலையில் உடல் நிலையை காரணம் காட்டி, சரண் அடைவதிலிருந்து விலக்கு கோரி, ராஜகோபால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, நீதிமன்றத்தில் சரணடைந்த ராஜகோபால் மற்றும் ஜனார்த்தனனை, புழல் சிறையில் அடைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மருத்துவ பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜகோபாலுக்கு சுவாசக் கோளாறு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மருத்துவமனையில் ராஜகோபாலுக்கு, செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 8 நாட்களாக தொடர்ந்து  அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது சிறுநீரகங்கள் செயலிழந்து, உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில் சிகிச்சைக்காக ராஜகோபாலை, தனியார் மருத்துவமனைக்கு மாற்ற கோரி அவரது மகன் தொடரந்த வழக்கு, உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. ஏற்கனவே இதுதொடர்பான வழக்கை ஏற்கனவே விசாரித்த உயர்நீதிமன்றம், அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை தொடர்பான மருத்துவ ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்படுவாரா ராஜகோபால் என்பது விசாரணைக்கு பின்னர் தெரிய வரும். 

Next Story

மேலும் செய்திகள்