திருமணமாகி ஒரு ஆண்டில் மனைவி மர்ம மரணம்... பெண்ணின் உறவினர்கள் குற்றச்சாட்டு
கரூர் அருகே, மனைவியை அடித்து கொன்றதாக கணவரையும், மாமியாரையும் உறவினர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்டம் சின்னகாளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அனிதா என்பவருக்கும், பரமத்திகாட்டு முன்னோர் பகுதியை சேர்ந்த ஜீவானந்தம் என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. அனிதாவின் பெற்றோரிடம் ஜீவானந்தம் கார் வாங்கி கொடுக்கும்படி பல நாட்களாக தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, கணவன் - மனைவிக்கு இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், அனிதாவின் பெற்றோருக்கு திடீரென போன் செய்த ஜீவானந்தம் உறவினர்கள், அனிதா தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்துள்ளனர். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அனிதாவின் உறவினர்கள் அங்கு வந்து பார்த்துவிட்டு, ஜீவானந்தம் தான் அடித்துகொன்றுவிட்டதாக கூறி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த ஜீவானந்தம், அவரது தாய் லட்சுமி ஆகியோரை அனிதாவின் உறவினர்கள் தாக்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். பிரேத பரிசோதனை முடிவுக்கு பிறகு நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததன் பேரில், அனிதாவின் உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Next Story