கஜா புயல் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் : 28,671 வீடுகள் கட்டும் பணி விரைவில் தொடங்கும் - பன்னீர்செல்வம் உறுதி
கஜா புயலில் வீடுகளை இழந்தவர்களுக்கு முதற்கட்டமாக 28 ஆயிரத்து 671 வீடுகள் கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உறுதி அளித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும், திமுக உறுப்பினர் மதிவாணன், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டித்தர வேண்டியது குறித்து, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். தீர்மானத்தின் மீது பேசிய மதிவாணன், கஜா புயலில் பாதித்தவர்களுக்கு இதுவரை வீடுகள் கட்டி தரவில்லை, தென்னை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை எனக் கூறினார். இதற்கு பதிலளித்த துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், கஜா புயலில் பாதித்த மக்களுக்காக முதற்கட்டமாக 300 சதுர அடியில்16 ஆயிரத்து 695 தனி வீடுகளும், 400 சதுர அடியில் 11 ஆயிரத்து 976 அடுக்குமாடி குடியிருப்புகளும் என, மொத்தமாக 28 ஆயிரத்து 671 வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு, உரிய நிவாரணங்கள் வழங்கப்பட்டிருப்பதாக கூறினார்.
Next Story