காதலியுடன் வெளியூர் தப்பி சென்ற இளைஞர் - சினிமா பாணியில் அரங்கேறிய கொடூர கொலை

காதலியுடன் வெளியூருக்கு தப்பி சென்ற இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட நிலையில், காதலியும் மாயமாகியுள்ள சம்பவம் தஞ்சையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
x
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே வெண்ணாற்று கரையில் 19 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் வாயில் துணி கட்டிய நிலையில், சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நடுக்காவேரி காவல்துறை, சடலத்தை கைப்பற்றி விசாரணையை தொடங்கியது.

சடலமாக கிடந்தவர் பெயர் பிரசாந்த் என்பதும் காதல் விவகாரத்தில் இந்த கொடூர கொலை அரங்கேறியுள்ளதும் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் மணலூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரசாந்த்... இவர் பக்கத்து ஊரான இலுப்பக்கோரையூரை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்த‌தாக தெரிகிறது. 

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் அந்த பெண்ணுடன் வீட்டிற்கு வந்த பிரசாந்த், பெண்ணை திருப்பி அனுப்பினால்  தற்கொலை செய்துகொள்வோம் என தன் பெற்றோரிடம் கூறியுள்ளார். 

இதனால் வேறு வழியில்லாமல் பிரசாந்தின் தாய் மலர்கொடி அவர்களை ஏற்றுக்கொள்ள, காதல் ஜோடி சேலம் நோக்கி தப்பி சென்றுள்ளது. அதற்குள், அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் காதல் ஜோடியை வலை வீசி தேடியுள்ளது இளம்பெண்ணின் குடும்பம்.

தன் குடும்பத்திற்கு ஆபத்து என்பதை உணர்ந்த பிரசாந்த்,  தாய் மலர்க்கொடிக்கு போன் செய்து, தங்கையை அழைத்து கொண்டு கும்பகோணம் செல்லுமாறு கூறியுள்ளார்.

இந்த நிலையில், சேலம் நோக்கி சென்றுகொண்டிருந்த காதல் ஜோடியை பிரசாந்தின் நண்பரும் இளம் பெண்ணின் உறவினருமான ஒருவர் சமயபுரத்தில் இறங்குமாறு கூறியுள்ளார். நண்பர் என்று நம்பி சமயபுரம் டோல்கேட் அருகே காதல் ஜோடி பேருந்தில் இருந்து இறங்கியுள்ளது. இதையடுத்து, அங்கு வந்த பிரசாந்தின் நண்பர், காதலை தங்கள் குடும்பம் ஏற்றுகொண்டதாக  நைசாகி பேசி அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளார். கிட்டத்தட்ட 3 மணி நேரமாக  பேச்சு நீடித்த நிலையில், திடீரென காரில் வந்த கும்பல் ஒன்று, பிரசாந்தை மட்டும் தனியாக கடத்தி சென்றுள்ளது. 

இதையடுத்து, வாயில் துணி கட்டி, தலை உள்பட உடலின் பல பாகங்களில் இரும்பு கம்பியால் தாக்கி கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார் பிரசாந்த்.

பிரசாந்தின் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவருடன் சென்ற இளம்பெண் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. பிரசாந்தின் காதலியான அந்த இளம்பெண்ணை மீட்டு விசாரணை நடத்தினால் தான் பிரசாந்த் கொலையில் தொடர்புடைய அனைவரும் சிக்குவார்கள் என்று பிரசாந்தின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்