பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற சிறுவர்கள்... ஏரியில் சடலமாக மீட்பு..

பள்ளி திறந்த முதல் நாளில், ஏரியில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் சடலமாக வீடு திரும்பிய சம்பவம் சிதம்பரம் அருகே உள்ள கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
x
சிதம்பரம் அருகே சாத்தப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் மணிவேல். இவரது மகன்கள் பரணி மற்றும் தரணி ஆகியோர் அங்குள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில்  4 மற்றும் 3 ஆம் வகுப்பு படித்து வந்தனர். இதே போல, மணிவேல் வீட்டருகே வசிக்கும் பாலகிருஷ்ண‌ன் என்பவரது மகன் பூவரசனும் 3 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். கோடை விடுமுறை முடிந்து முதல் நாள் பள்ளிக்கு சென்ற மூவரும் , பள்ளி முடிந்தவுடன் வீடு செல்லாமல் , அங்குள்ள ஏரியில் குளிக்க சென்றுள்ளனர். இந்த நிலையில், பள்ளிக்கு சென்ற சிறுவர்கள் வீடு திரும்பாத‌தால், பெற்றோர் மற்றும் ஊர்மக்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். அப்போது ஏரி அருகே, மாணவர்களின் புத்தக பையை கண்ட ஊர்மக்கள், தீயணைப்பு துறை உதவியுடன் சிறுவர்களை ஏரியில் தேடியுள்ளனர். பின்னர் ஏரியில் இருந்து மூவரின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அளவுக்கு அதிகமாக மணல் அள்ளியதே, மாணவர்கள் நீரில் மூழ்க காரணம் என ஊர்மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.  பள்ளி திறந்த நாள் அன்றே, சின்னஞ்சிறுவர்கள் ஏரியில் குளிக்க சென்று உயிரை விட்டது, கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்