மதுரை மக்களவை தேர்தலை ரத்து செய்ய கோரிய வழக்கு தள்ளுபடி...
மதுரை மக்களவை தொகுதி தேர்தலை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மதுரை தொகுதியில் போட்டியிடும்,அ.தி.மு.க.வினர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதால் மதுரை மக்களவை தொகுதி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என, சுயேட்சை வேட்பாளர் கே.கே.ரமேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பண பட்டுவாடாவை தடுக்க தீவிர கண்காணிப்பில் தேர்தல் பறக்கும் படையினர் ஈடுபட்டு வருவதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, பொது நலன் என்ற பெயரில் நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் மனுதாரருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்த நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Next Story