ஜாக்டோ- ஜியோ போராட்டம் : ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப உத்தரவு

ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த ஆசிரியர்கள் வரும் 25 ந்தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
x
ஜாக்டோ- ஜியோ அமைப்பினரின் வேலைநிறுத்த போராட்டத்திற்கு தடைவிதிக்க கோரி சென்னையை சேர்ந்த கோகுல் என்ற மாணவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் பிளஸ்டூ செய்முறை தேர்வுகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில் ஆசிரியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் மாணவ-மாணவிகள் பாதிக்கப்படுவார்கள் என்று வாதிட்டார். தொடக்க பள்ளிகள் தவிர்த்து பிற அரசு பள்ளிகளில் 39.7% ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை என்றும், அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.  தங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாததால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஜாக்டோ-ஜியோ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த ஆசிரியர்கள் வரும் 25 ந்தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்