அமராவதி ஆற்றில் மணல் கடத்தல் புகார்
அமராவதி ஆற்றில் மணல் கடத்தலை தடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளுக்கான வாழ்வாதாரமாகவும் அமராவதி ஆறு உள்ளது. இந்த ஆற்றில் இருந்து வடுகபாளையம், நிழலி கரை, கவுண்டையன் வலசு போன்ற பகுதிகளில் மணல் எடுக்கப்பட்டு வந்துள்ளது. ஒரு மாதம் முன்பு வரை, சிறிய வாகனங்கள் மூலம் பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளில் மணல் விற்பனை நடந்ததாகவும் மூலனூர் அருகே எடைக்காடு பகுதியில் குவாரி அமைத்து தினமும் 100க்கும் மேற்பட்ட லாரிகளில் மணல் அள்ளுவதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். இது குறித்து புகார் அளித்தும் கூட, புஞ்சை தலையூர் கிராம அதிகாரிகளும் வருவாய் துறையினரும் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக தெரிவித்துள்ளனர். எனவே, வாழ்வாதாரமாகவும், குடிநீர் ஆதாரமாகவும் உள்ள அமராவதி ஆற்றில், மணல் கடத்தலை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்
Next Story

