பிரதமராக மோடி வர துணை நிற்போம் - முதல்வர் பழனிசாமி
மத்தியில் நிலையான ஆட்சி அமைக்க வாக்களியுங்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சேலம் மாவட்டம் கருமந்துறையில், மக்களவை தேர்தலில் சேலம் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் சரவணன் மற்றும் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் எல்.கே.சுதீசை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, மத்தியில் பதவி வகிப்பதற்காக தி.மு.க. கூட்டணி வைத்த போது, பா.ஜ.க. மதவாத கட்சியாக அவர்களுக்கு தோன்றவில்லை என்றும், அ.தி.மு.க. கூட்டணி அமைத்தால் அப்போது, அது மதவாத கட்சியாக தி.மு.க.வுக்கு தெரியும் என்று எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார். 1999 ஆம் ஆண்டில் இருந்து மத்தியில் ஆட்சியில் அங்கம் வகித்த தி.மு.க. தமிழகத்துக்கு கொண்டு வந்த திட்டங்கள் என்ன என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, காவிரி முல்லைப் பெரியாறு உள்ளிட்ட பிரச்சனைகளை தீர்த்தார்களா என கேள்வி எழுப்பினார். புல்வாமா போன்ற ஒரு சம்பவம் இந்தியாவில் மீண்டும் நடைபெறாமல் தடுக்க ஒரு நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காகவே அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார். தி.மு.க. கூட்டணி சுயநலக் கூட்டணி என்றும், அ.தி.மு.க. கூட்டணி மக்கள் நலன்சார்ந்தது என்று தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று வாக்காளர்களை கேட்டுக் கொண்டார்.
Next Story