பெண் மருத்துவர் பலாத்கார படுகொலை சம்பவம் - காவல்நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

ஐதராபாத்தில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் அடைக்கப்பட்டிருந்த காவல் நிலையத்தை பொதுமக்கள் சூறையாட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெண் மருத்துவர் பலாத்கார படுகொலை சம்பவம் - காவல்நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x
தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில்  கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்தவர் 27 வயது பெண் பிரியங்கா ரெட்டி. கடந்த வியாழக்கிழமை அன்று இரவு பணி முடிந்து பிரியங்கா ரெட்டி வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது சாத்நகர் பகுதியில் சுங்க சாவடி அருகே இருசக்கர வாகனம் பழுதானது. அப்போது பிரியங்கா ரெட்டிக்கு உதவுவது போல நடித்த இளைஞர்கள் அவரை பாலியல் கூட்டுவன்கொடுமை செய்துள்ளனர். அவரை அந்த கொடூர இளைஞர்கள் கொலை செய்தனர். பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பெட்ரோல் வாங்கி வந்த அந்த இளைஞர்கள் பிரியங்கா ரெட்டி உடலை பாலம் ஒன்றின் கீழ் எரித்தனர்.  

தகவலறிந்து விசாரணையில் இறங்கிய சாத்நகர் போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து குற்றவாளிகளை அடையாளம் கண்டனர். 
லாரி ஓட்டுனர்கள் முகமத் ஆரிப் சென்னகேசவ் மற்றும் கிளீனர்கள் சிவா, நவீன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலையான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்  குற்றவாளிகள் 4 பேரையும் போலீசார் சாத்நகர் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.  இந்த தகவலை அறிந்து காவல்நிலையம் முன் திரண்ட பொதுமக்கள் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். போலீஸ் வாகனம் மீது  கல்வீச்சில் தாக்குதலில் ஈடுபட்ட பொதுமக்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். 

கைது செய்யப்பட்ட 4 பேரையும் சிறைக்கு அழைத்து செல்லும் வழியிலும்  பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், செல்லப்பள்ளி சிறைக்கு குற்றவாளிகளை கொண்டு செல்ல இருந்த போலீசார், செஞ்சலகுடா சிறைக்கு அழைத்து சென்றனர்.


பிரியங்கா ரெட்டியை படுகொலை செய்த குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க கோரி மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில்,  பெண்கள் அமைப்பினர், மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் சென்றனர்.  பெண்கள் வாயில் கருப்புத்துணி கட்டிக்கொண்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

டெல்லியிலும் இளைஞர் காங்கிரசார், மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்று மருத்துவர் பிரியங்கா ரெட்டிக்கு அஞ்சலி செலுத்தினர். இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். 

தெலுங்கானா மாநிலம் மட்டுமல்லாது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய  மருத்துவர்  பிரியங்கா ரெட்டி படுகொலையை அறிந்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தராஜன், அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.  



Next Story

மேலும் செய்திகள்