நாளை கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை
உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து நாளை கட்டுப்பாடுகளை மீறி பட்டாசு வெடிப்பவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து, தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் 2 மணி நேரம் பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழக அரசு நேரம் நிர்ணயித்துள்ளது.
இந்த நேரத்தில் பட்டாசு வெடிப்பதை உறுதி செய்யும் வகையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில், உச்சநீதிமன்ற தீர்ப்பு அமலாக்கம் குறித்து கண்காணிக்க தனிப்படைகள் அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 500 தனிப்படைகள் அமைக்கப்பட உள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நீதிமன்ற உத்தரவை மீறி பட்டாசு வெடித்தால், 6 மாதம் சிறை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story