அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மம்தா பானர்ஜி உள்ளிட்ட 4 மாநில முதலமைச்சர்கள் ஆதரவு...
டெல்லி துணைநிலை ஆளுநா் அலுவலகத்தில், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மம்தா பானர்ஜி உள்ளிட்ட 4 மாநில முதலமைச்சர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் நடைபெற்று வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் போராட்டத்திற்கு துணைநிலை ஆளுநா் தான் காரணம் என்றும், அவர் இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் எனவும் கூறி, அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆறாவது நாளாக ஆளுநர் அலுவலகத்தில் தொடர் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து ஆதரவு தெரிவிப்பதற்காக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் குமாரசாமி ஆகியோர் டெல்லி ஆளுநர் அலுவலகத்தில் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து, அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்திற்கு சென்ற 4 மாநில முதலமைச்சர்கள், அவரின் மனைவியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர்கள், டெல்லியில் கடந்த 4 மாதங்களாக அரசு நிர்வாகம் சீரான நிலையில் இல்லை என்றும், இது கூட்டாட்சி தத்துவத்திற்கு விடுக்கப்பட்ட சவால் என்றும் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என்றும், பிரச்சினை தொடர்பாக, இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தின் போது, பிரதமரிடம் வலியுறுத்துவோம் என்றும் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் தெரிவித்தனர்.
Next Story