தெலுங்கு நடிகர்களை தொடர்ந்து தமிழ்நாட்டு பக்கம் திரும்பிய ஸ்ரீரெட்டி - ஸ்ரீரெட்டி வெளியிட்டு வரும் பட்டியலால் திரையுலகில் பரபரப்பு

தெலுங்கு நடிகர்களை தொடர்ந்து, தமிழ் திரையுலகினர் மீதும் தொடர்ந்து பாலியல் புகார்களை சொல்லி பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறார் நடிகை ஸ்ரீ ரெட்டி...
தெலுங்கு நடிகர்களை தொடர்ந்து தமிழ்நாட்டு பக்கம் திரும்பிய ஸ்ரீரெட்டி - ஸ்ரீரெட்டி வெளியிட்டு வரும் பட்டியலால் திரையுலகில் பரபரப்பு
x
நடிகை ஸ்ரீரெட்டி அடுத்ததாக,  இயக்குநர் சுந்தர்-சி பற்றி வெளியிட்டுள்ள கருத்து, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது...  அதில்,  கணேஷ் என்பவர்  சுந்தர்-சி.யின் அடுத்த படத்தில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி, தம்மை அவரிடம் அழைத்துச் சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.  சுந்தர் சி. தம்மிடம் நெருக்கமாக இருக்க விரும்புவதாக கணேஷ்  தெரிவித்தார் எனவும் ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.. அதன் பின் நடந்ததை இறைவன் அறிவான் என, அவர் குறிப்பிட்டுள்ளார். 

தெலுங்கு இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறியது, தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை எதிரில் அரை நிர்வாண போராட்டம் நடத்தியது என, ஸ்ரீரெட்டியின் நடவடிக்கை இந்திய பட உலகையே அதிர வைத்தது. நடிகைகளை அழைப்பவர்கள் என, பெயர் பட்டியலையும் வெளியிட்டார். இதுகுறித்து, மகளிர் ஆணையம் விசாரணையில் இறங்கியது. 

அமெரிக்காவில் விபசாரத்தில் ஈடுபடும் நடிகைகள் பட்டியல் தம்மிடம் இருப்பதாக, மற்றொரு அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டார். தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஒருவர் மீதும் ஏற்கனவே குற்றம் சாட்டி இருந்தார். ஆனால், அவரது பெயரை வெளியிடவில்லை.

தமது முகநூல் பக்கத்தில் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள்  மீது புகார் தெரிவித்து வருகிறார். நடிகர் நானி, தம்மிடம் தவறாக நடந்ததாக கூறினார். இதனை மறுத்த அவர், ஸ்ரீரெட்டிக்கு நோட்டீஸ் அனுப்பினார்.. 

ஆனாலும், தமது முகநூல் பக்கத்தில், ''ஸ்ரீலீக்ஸ்'' என்ற பெயரில் தமக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களின் பெயர்களையும், புகைப் படங்களையும் செல்போன் குறுந் தகவல்களையும்  வெளியிட்டு வருகிறார். 

இந்த நிலையில், #tamilleaks என்ற பெயரில், தமிழ்த்திரைப்படத் துறையினர் பக்கம், அவரது பார்வை திரும்பியது. தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது குற்றம் சாட்டியுள்ளார். முருகதாசும் தாமும் தனிமையில் சந்தித்தாக குறிப்பிட்டு பரபரப்பை ஏறபடுத்தினார். அதே போல தமக்கு வாய்ப்பு வழங்குவதாக கூறி, நடிகர் ஸ்ரீகாந்தும் தம்மை பயன்படுத்திக்கொண்டதாக குறிப்பிட்டார். 
  
இதையடுத்து, நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்சும், தம்மை விடுதி அறைக்கு வரவழைத்து, தம்மை தவறாக பயன்படுத்தியதாக பரபரப்பை கிளப்பினார்.

ஸ்ரீ ரெட்டி தமது அடுத்த பதிவில், தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் விஷாலிடம் இருந்து மிரட்டல் வருவதாக கூறியுள்ளார். ஆனாலும், கோலிவுட்டின் இருண்ட பக்கத்தில் உள்ள ரகசியங்களை வெளியிட உள்ளதாகவும் ஸ்ரீரெட்டி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

திரைப் பிரபலங்கள் தான் என்றில்லை அரசியல் தலைவர்களும் தமது பட்டியலில் இருப்பதாக பரபரப்பை கூட்டியுள்ளார்..  குறிப்பாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு நெருக்கமாக இருக்கும் அரசியல் பிரபலங்கள் தம்முடன் நெருங்கிப் பழகியதாக, அவர் குறிப்பிட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்