புதுச்சேரியில் சூரிய கிரகணத்தை முன்னிட்டு ஸ்ரீமணக்குள விநாயகர் கோயில் உள்ளிட்ட கோயில்களின் நடை அடைக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் கோயிலின் வெளியே இருந்தபடி சுவாமியை வணங்கிச் சென்றனர்.
கிரகணத்தை முன்னிட்டு கும்பகோணத்தில் ஒருவர் உலக்கையை தரையில் செங்குத்தாக நிறுத்தி வைத்தார். கிரகணத்தின் போது மட்டுமே இந்த நிகழ்வு நடைபெறும் என்பதால் இதனை ஏராளமானோர் அதிசயத்துடன் பார்த்துச் சென்றனர்.
இதேபோல் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அம்மிக்கல், உலக்கை உள்ளிட்ட பொருட்களை மக்கள் செங்குத்தாக நிறுத்தி வைத்தனர். இந்த நிகழ்வை ஏராளமான சிறுவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.
அதேநேரம் சூரியகிரகணம் இல்லாத சமயத்திலும் உலக்கை நேராக நிற்கும் என விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சேலத்தில் ஒரு நிகழ்வு நடந்தது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடந்த இந்த நிகழ்வில் உரலில் உலக்கை செங்குத்தாக நிறுத்தி வைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.