தமிழ்நாடு

நிலத்தடி நீரை எடுக்க தனியார் குடிநீர் நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு - சென்னை உயர் நீதிமன்றம்

நிலத்தடி நீரை எடுக்க தனியார் குடிநீர் நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

தமிழகத்தில் நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில், தனியார் குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள், நிலத்தடி நீரை உறிஞ்சுவதற்கு அரசிடம் தடை இல்லா சான்று பெற வேண்டும்

என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்து தமிழக அரசு கடந்த 2014ஆம் ஆண்டு அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையை எதிர்த்து 75 குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அந்த மனுவுக்கு பதில் அளித்த தமிழக அரசு, இயற்கை வளமான நிலத்தடி நீரை பாதுகாக்க தமிழக அரசுக்கு தார்மீக உரிமை உள்ளதென்றும், வர்த்தக நோக்கத்திற்காக நிலத்தடி நீரை தனியார் நிறுவனங்கள் உறிஞ்சுவதை தடை செய்யவே இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், நிலத்தடி நீர் எடுப்பதை ஒழுங்குபடுத்த உரிய விதிகள் இல்லாத காரணத்தால், உலகிலேயே அதிக அளவில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படும் நாடாக இந்தியா உள்ளது என்றார். தமிழகத்தில் 77 சதவீத நிலத்தடி நீர் ஏற்கனவே உறிஞ்சப்பட்டு விட்டதாகவும் நீதிபதி தெரிவித்தார். வருங்கால சமுதாயத்துக்கு தேவையான நிலத்தடி நீரை பாதுகாக்க தமிழக அரசுக்கு உரிமை உள்ளது என கூறி, தமிழக அரசின் அரசாணையை உறுதி செய்து உத்தரவிட்டார். மேலும், உறிஞ்சப்படும் நிலத்தடி நீரை அளவீடு செய்ய மீட்டர் பொருத்தாத நிறுவனங்களுக்கு தடை இல்லா சான்று வழங்க கூடாது என்றும், அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சும் நிறுவனங்கள் மீது திருட்டு வழக்கு பதிவு செய்து அவற்றின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார். வரையறுக்கபட்ட அளவை தாண்டி நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறதா என்பதை கண்காணிக்க மாவட்டம் தோறும் கண்காணிப்பு குழுவை மாவட்ட ஆட்சியர் அமைக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"