கம்மம் மாவட்டம் சத்தியப்பள்ளியில் மாதர் என்பவர் கள்ளநோட்டு அச்சிட்டு புழக்கத்தில் விடுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த இடத்தை சுற்றி வளைத்த போலீசார், சோதனை மேற்கொண்டனர். அப்போது, 100 கோடி மதிப்பிலான பழைய 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக கைப்பற்றப்பட்டது. மேலும், 7 கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் கட்டுகள், அச்சிடும் இயந்திரம், கணினி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. கள்ளநோட்டு அச்சிடும் பணியில் ஈடுபட்ட மாதர் தலைமையிலான 6 பேர் கொண்ட கும்பலை தெலங்கானா போலீசார் கைது செய்தனர். இதுவரை எவ்வளவு கள்ளநோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது, அதன் பின்னணியில் முக்கிய புள்ளிகள் இருக்கிறார்களா என்பது குறித்து தெலங்கானா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.