சென்னையில் 'வாத்தி', 'பகாசூரன்' உள்ளிட்ட புதிய படங்களின் திருட்டு டி.வி.டி.களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்...
சென்னை வடக்கு கடற்கரை காவல் எல்லைக்குட்பட்ட பஜார் பகுதியில், திருட்டு டிவிடிகள் விற்பனை செய்யப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் சோதனையில் ஈடுபட்ட போலீசார், 600க்கும் மேற்பட்ட புது பட டிவிடிகளுடன் வலம்வந்த, நாகராஜ் என்ற நபரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், கோவிலம்பாக்கம் பகுதியில் வீடு எடுத்து, எட்டு வருடங்களாக, புதிய படங்களின் டிவிடிகளை பிரிண்ட் போட்டு, விற்பனை செய்துவந்தது அம்பலமானது. இதனிடையே, டிவிடிகளை காப்பி செய்வதற்கான இயந்திரங்கள் மற்றும் நான்கு ஆயிரத்து 500 புது பட டிவிடிகளை, காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.