"கலகமூட்டும் தீயவர்களின் எண்ணத்திற்கு இடம் கொடுக்க வேண்டாம்" - முதல்வர் பரபரப்பு பதிவு
"கலகமூட்டும் தீயவர்களின் எண்ணத்திற்கு இடம் கொடுக்க வேண்டாம்" - முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு பதிவு
பெருந்தலைவர் காமராஜரின் கனவுகளை நிறைவேற்ற அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம் என்றும், கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்க வேண்டாம் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர், பெருந்தலைவர் காமராஜரை 'பச்சைத்தமிழர்' என்று போற்றியவர் தந்தை பெரியார் என்றும்,
குடியாத்தம் இடைத்தேர்தலில் பெருந்தலைவருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என முடிவெடுத்தவர் பேரறிஞர் அண்ணா என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பெருந்தலைவர் மறைந்தபோது ஒரு மகன் போல நின்று இறுதி மரியாதை ஏற்பாடுகளைச் செய்து, நினைவகம் அமைத்து, அவரது பிறந்தநாளைக் கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் கருணாநிதி என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
உடல் நலிவுற்ற நிலையிலும் தனது திருமணத்துக்கு நேரில் வந்து பெருந்தலைவர் வாழ்த்தியது தனது வாழ்நாளில் கிடைத்ததற்கரிய பெரும்பேறு என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அத்தகைய பெருந்தலைவர், பெருந்தமிழர் குறித்துப் பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல என்றும், மரியாதைக்குரிய தலைவர்களின் மாண்பைக் காக்கும் வகையில்தான் எந்தக் கருத்தும் பகிரப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
சமூகநீதியையும் மதச்சார்பற்ற நல்லிணக்கத்தையும் உருவாக்க வாழ்நாளெல்லாம் உழைத்த பெருந்தலைவரின் கனவுகளை நிறைவேற்ற அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம்...வீண் விவாதங்களைத் தவிர்ப்போம் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.