பேனா மை பாட்டிலை உடைத்து திடீரென கையை அறுத்துக்கொண்ட கைதி.. நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு..

Update: 2023-03-22 15:09 GMT

நெல்லையில் பதட்டம் ஏற்படுத்திய சீவலப்பேரி பூசாரி கொலை வழக்கில் விசாரணை கைதி நீதிமன்றத்தில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் சீவலப்பேரியில் அமைந்துள்ள சுடலைமாட சுவாமி கோவிலை நிர்வகிப்பதில் ஏற்பட்ட தகராறில் பூசாரி சிதம்பரம் என்பவர், கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள இரண்டு பேரை விசாரணைக்காக நெல்லை மாவட்ட கூடுதல் மூன்றாவது அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து வந்தனர். அப்போது தங்கபாண்டி என்ற விசாரணை கைதி நீதிமன்றத்திலிருந்து பேனா மை பாட்டிலை உடைத்து இடது கையில் கிழித்து தற்கொலைக்கு முயன்றார். இதை கண்ட போலீசார், உடனடியாக தங்கப்பாண்டியை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். பல முறை ஜாமின் கேட்டும் கிடைக்காததால் விரக்தியில் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. தங்கபாண்டியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்