ஃபயர் கட்டுக்கு இளைஞர்கள் மத்தியில் அமோக வரவேற்பு
காஞ்சிபுரத்தில், தலையில் நெருப்பு வைத்து முடி திருத்தம் செய்யும் முறைக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.;
பொதுவாக சலூன்களுக்கு சென்றால் மிலிட்டரி கட், போலீஸ் கட் என கேட்ட காலமெல்லாம் மலையேறி விட்டது. தற்போது, புதிய பெயர்களில் ஸ்டைலான சிகையலங்காரங்கள் அதிக அளவில் வந்து விட்டன. அவற்றில் ஒன்று தான், 'தலையில் நெருப்பு பற்ற வைத்து முடி திருத்தம்' செய்யும் புதிய முறையாகும். தமிழகத்தில் திருப்பூர் நகரை தொடர்ந்து, தற்போது காஞ்சிபுரத்திலும் , 'ஃபயர் கட்' பிரபலமாகி வருகிறது. தலைமுடியில் நெருப்பு பற்றி எரியும்போதே சிகையலங்காரம் செய்கிறார், சிகை அலங்கார நிபுணர் ஜாக். இளைஞர்கள், 500 ரூபாய் கட்டணம் செலுத்தி, காத்திருந்து ஃபயர் கட் செய்து வருகின்றனர். இந்த சிகையலங்காரத்தை தலை முடி அடர்த்தியாக உள்ளவர்களுக்கு மட்டுமே ஜாக் செய்கிறார்.