சென்னையில் வேகமெடுக்கும் தடுப்பூசி பணி - இதுவரை தடுப்பூசி செலுத்தியவர்கள் எத்தனை பேர்?
சென்னையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமெடுத்துள்ளன. இதனால் கொரோனா பாதிப்பு முற்றிலுமாக நீங்குமா ? என்பதை பற்றி அலசுகிறது இந்த தொகுப்பு...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை, தமிழக சுகாதாரத் துறை முடுக்கி விட்டுள்ளது. அந்த வகையில், இதுவரை 3 கோடி டோஸ்களை கடந்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக, தலைநகர் சென்னையில், 74 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்த தகுதியானவர்களாக கண்டறியப்பட்டு, இதுவரை 40 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதில், 49 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 23 சதவீதம் பேர் 2 தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், மத்திய அரசு கூடுதல் தடுப்பூசிகளை ஒதுக்கும் பட்சத்தில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 100 சதவீத தடுப்பூசிகளை விரைந்து செலுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் ஒருபகுதியாக, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், மூத்த குடிமக்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்துதல், வார்டு வாரியாக தடுப்பூசி முகாம்களை அமைத்தல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.பொதுமக்கள் தயக்கமின்றி தடுப்பூசி செலுத்துவதன் மூலம், இந்த ஆண்டு இறுதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் நிலையான நோய் எதிர்ப்பு சக்தியை பெற முடியும் என சுகாதாரத்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.
Next Story