"நாட்டின் எல்லையை காக்கும் ராணுவ வீரர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டாமா?" - உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
நாட்டின் எல்லையை காக்கும் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு உரிய இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டாமா என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் பணியில் உள்ள ராணுவ வீரரின் வாரிசுகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் தீர்ப்புக்கு தடை விதித்த உயர்நீதிமன்ற உத்தரவை நீக்க கோரி , ராணுவ வீரர்களின் வாரிசுகளான 3 பேர் தனித்தனியாக மனுதாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்த போது நாட்டின் எல்லையை காக்கும் ராணுவ வீரர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டாமா என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். உள்நாட்டில் எந்த அச்சுறுத்தல் இல்லாமல் நாம் நிம்மதியாக உள்ளோம் என்றால், அதற்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ பாதுகாப்பு வீரர்கள்தான் காரணம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் உரிய இட ஒதுக்கீடு இல்லை என்றால், அனைத்து வகை இட ஒதுக்கீடுமே தேவை இல்லை என்று நீதிபதிகள் கூறினர். மறுபரிசீலனை செய்து, உரிய முடிவை தெரிவிக்க தமிழக. அரசின் தலைமை செயலருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவ 5 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
Next Story