தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்த வழக்கு: ஆக்ஸிஜன் வழங்கும் முன் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறதா..?
தமிழக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கப்படுவதற்கு முன்பாக முறையாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறதா? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பி உள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் சிகிச்சையின்போது ஆக்சிஜனுக்கு பதிலாக, தவறுதலாக நைட்ரஜன் ஆக்சைடை கொடுத்ததால், ருக்மணி என்பவர் உயிரிழந்தார். மனைவி உயிரிழப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை கோரி, கணேசன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இதுதொடர்பாக ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்றும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு இழப்பீடு ஏதும் வழங்கப்பட்டுள்ளதா? என அரசுக்கு கேள்வி எழுப்பினர். மேலும், தமிழக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கப்படுவதற்கு முன்பாக, முறையாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறதா? என கேள்வி எழுப்பிய நீதிபதி, இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஏப்ரல் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Next Story