கடலூர் நகரில் நடப்படும் 1000 ஈச்சம் மரங்கள் : சொந்த தொகுதிக்கு செலவிடும் அமைச்சர் எம்.சி.சம்பத்
கடலூரில் சாலையோரமும், அரசு அலுவலகங்களிலும் ஈச்சம் மரங்கள் நடவு செய்யப்படுவது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கடற்கரை நகரம் என்றழைக்கப்படும் கடலூர், தானே புயலுக்கு முன், தானே புயலுக்கு பின் என அழைக்கும் அளவுக்கு நிலைமை மாறிப்போனது. 2011ஆம் ஆண்டில் வந்த புயல், மா, முந்திரி உள்ளிட்ட பண பயிர்கள் உள்ளிட்ட அனைத்து மரங்களையும் வேரோடு சாய்த்தும், முறித்து வீசியும் நாசம் செய்தது. பசுமை தழைத்திருந்த கடலூரில், பாலைவனம் போல் மாறியது . இந்நிலையில், விளைபயிர் தோட்டங்கள் ஒருபக்கம் உருவாகும் நிலையில், சாலையின் இருமருங்கிலும் ஈச்சம் மரங்கள் நடப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே, அங்குள்ள வெள்ளி கடற்கரையில், தொண்டு நிறுவனம் ஒன்று நடவு செய்த100 ஈச்ச மரங்கள் நன்றாக வளர்ந்ததை தொடர்ந்து, அந்தத் தொகுதி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான எம்.சி. சம்பத், சொந்த செலவில் ஆயிரம் மரங்களை நட்டு வருகிறார். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்பட பல்வேறு இடங்களில் நடவு செய்துள்ள ஈச்சம் மரங்கள், தோகையை விரித்து காற்றில் ஆட துவங்கியுள்ளன. தற்போது நடப்படும் மரங்கள், புதிய வேர்விட்ட பின்னர், தோகை அவிழ்க்கப்படும் என கூறப்படுகிறது. இந்த புதிய முயற்சி காரணமாக விரைவில் கடலூர் நகரம் புதுப்பொலிவை எதிர்நோக்கியுள்ளது.
Next Story