சென்னை ஐ.ஐ.டி.யில் கேரள மாணவி தற்கொலை - ஐ.ஐ.டி. பேராசிரியர்களே காரணம் என மாணவி கடிதம்
சென்னை ஐஐடியில் கேரள மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் 3 பேராசிரியர்கள் துன்புறுத்தலே காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த 8ஆம் தேதி கேரள மாநிலம் கொள்ளத்தை சேர்ந்த பாத்திமா என்ற மாணவி சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள மகளிர் விடுதியில் தற்கொலை செய்தார். இது குறித்து, போலீசார் விசாரணை நடத்தியதில் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் மாணவி தற்கொலை செய்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் நேற்று மாணவியின் தந்தை அப்துல் லத்தீப், நேற்று கேரள முதலமைச்சர் அலுவலகத்தில் அளித்த புகாரில், தனது மகளின் மரணத்திற்கு சென்னை ஐஐடியை சேர்ந்த 3 பேராசிரியர்களே காரணம் என்று கூறியிருந்தார். தனது மகளின் செல்போனில் இருந்த கடிதத்தின் மூலம் தெரிந்து கொண்டதாகவும் புகாரில் அவர் கூறியிருந்தார்.
இதனையடுத்து அந்த கடிதம் தமிழக முதலமைச்சர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு, வழக்கை தீவிரமாக விசாரிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக சென்னை டிஜிபி அலுவலகத்தில் மாணவியின் தந்தை அப்துல் லத்தீப், நாளை புகார் அளிக்க இருக்கிறார்.
Next Story