5 வயது குழந்தையை கொலை செய்த தாய்? - "மனநலம் பாதிக்கப்பட்ட தாயும் தூக்கிட்டு தற்கொலை"

கோவையில் கணவரை இழந்து பெற்றோர்களுடன் வாழ்ந்து வந்த பெண், தனது 5 வயது மகளை கொலை செய்து, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
x
கோவை ஒண்டிப்புதூர் ஸ்ரீ காமாட்சி நகரில் வேதவள்ளி என்பவர் தனது பெற்றோர் மற்றும் 5 வயது மகள் கார்குழலியுடன் வசித்து வந்துள்ளார். வேதவள்ளி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படும் நிலையி​ல்,  அவரது இரண்டாவது கணவர் கண்ணன் கடந்த 4 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். 

பெங்களூரில் வேதவள்ளி மனநல சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 17ஆம் தேதி இரவு வேதவள்ளியின் 5 வயது மகள் கார்குழலிக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, வேதவள்ளியின் பெற்றோரும், தம்பியும் கொண்டு வந்து சேர்த்துள்ளனர். குழந்தை இறந்ததை அறிந்த சிங்காநல்லூர் போலீசார்,  குழந்தையின் வீட்டிற்கு விசாரணைக்கு ​சென்றுள்ளனர். 

அங்கு வேதவள்ளி, வீட்டில் தூக்கிட்ட நிலையில் உயி​ரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார். அவரது சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் டிவி உடைந்து, பொருட்கள் பல சிதறி கிடந்ததும், ஆங்காங்கே ரத்தம் சிதறி இருந்ததும், வேதவள்ளியின் தம்பி மாதவனுக்கு தலை, முகத்தில் அடிப்பட்டிருந்ததும் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனைத் தொடர்ந்து  வேதவள்ளியின் தந்தை ராமகிருஷ்ணன், தம்பி மாதவன், தாய் லீலாவதியிடம்  தனித் தனியாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். குழந்தை கார்குழலி மூச்சு திணறி உயிரிழந்தது பிரேத பரிசோதனையின் முதற்கட்ட தகவலில் தெரிய வந்துள்ளது. 

இந்நிலையில்,  வேதவள்ளி தனது 5 வயது மகளை தலையணை கொண்டு கொலை செய்து, தானும் தற்கொலை செய்துக் கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். வேதவள்ளியின் பிரேத பரிசோதனைக்கு  பின்னரே உண்மை நிலை தெரியவரும் என கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்