"நடிகர் சங்க தேர்தல் செல்லாது" - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

சட்டப்படி நடத்தப்படாததால் நடிகர் சங்க தேர்தல் செல்லாது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
x
நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள் நீதிபதி கல்யாணசுந்தரம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, விஷால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த ஜுன் 23 ஆம் தேதி நடந்த தேர்தலில் 80 சதவீத உறுப்பினர்கள் வாக்களித்துள்ளதாகவும், பதவி காலம் முடிந்தாலும் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படும் வரை தற்போதைய நிர்வாகிகள் பதவியில் நீடிக்கலாம் எனவும் வாதிட்டார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் இல்லாததால் சங்கத்தின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரியை நியமிப்பது தொடர்பாக, கடந்த 5ம் தேதி தமிழக அரசு, தற்போதைய நிர்வாகிகளுக்கே நோட்டீஸ் அனுப்பியதாகவும் அவர் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டிருக்காவிட்டால் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றிருப்பார்கள் எனவும் விஷால் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், உறுப்பினர்களின் புகார் குறித்து விசாரிக்கவும், தனி அதிகாரியை நியமிக்கவும் பதிவாளருக்கு அதிகாரம் உள்ளதாக கூறினார். ஆறு மாதங்கள் பதவி நீட்டிப்பு செய்வதற்கு நடிகர் சங்க விதிகளில் இடமில்லாததால் சங்கத்தின் குழு நடத்திய தேர்தலே செல்லாது எனவும் வாதிட்டார். மேலும், நடிகர் சங்க தேர்தல் நடைமுறைகளில் தமிழக அரசு  தலையிடவில்லை எனவும் அரசு தரப்பு வழக்கறிஞர் தெளிவுபடுத்தினார். இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் 18ஆம் தேதிக்கு நீதிபதி கல்யாணசுந்தரம் தள்ளி வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்