சினிமா பாணியில் பெண்ணை ஏமாற்றிய நபர்... வெளியான அதிர்ச்சியூட்டும் உண்மைகள்

சினிமா பாணியில் அக்கா, மாமாவாக சிலரை நடிக்க வைத்து, பெண்ணிடம் பல லட்சம் ரூபாய் வரதட்சணை பெற்ற போலி மருத்துவர், திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
x
சினிமா பாணியில் அக்கா, மாமாவாக சிலரை நடிக்க வைத்து, பெண்ணிடம் பல லட்சம் ரூபாய் வரதட்சணை பெற்ற போலி மருத்துவர், திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த கார்த்திக் , கொளத்தூரை சேர்ந்த பெண் ஒருவரிடம் மருத்துவர் என கூறி பேஸ்புக் மூலம் பழகியுள்ளார். மருத்துவர் என ஸ்டிக்கர் ஒட்டிய சொகுசு கார் மூலம் பெண்ணை ஏமாற்றிய கார்த்திக், சொந்தமாக மருத்துவமனை வைத்திருப்பதாகவும் கூறி தன் காதல் வலையில் வீழ்த்தியதாக கூறப்படுகிறது. இவர்களது காதல் திருமணம் வரை செல்ல, சந்தர்பத்தை பயன்படுத்திகொள்ள நினைத்த கார்த்திக், பெண் வீட்டாரிடம் 15 லட்சம் ரூபாய்க்கும் மேல் வரதட்சணையாக பெற்றதாக தெரிகிறது. இது மட்டுமில்லாமல், வரவேற்பு நிகழ்ச்சி நடத்தவும்,  75 ஆயிரம் ரூபாய் கேட்டதால் சந்தேகம் அடைந்த பெண் வீட்டார், வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களிடம் விசாரித்தபோது கார்த்திக் மருத்துவர் அல்ல என்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அவர்கள் அளித்த புகாரின் பேரில் அங்கு வந்த காவல்துறையினர் வரவேற்பு நிகழ்ச்சிக்கு தயாராகி கொண்டிருந்த கார்த்திக்கிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். இதில் கார்த்திக் வெறும் 2 ஆண்டுகள் மட்டும் மருத்துவக்கல்லூரியில் படித்து விட்டு கோவையில் மருத்துவம் பார்த்துவந்த‌து தெரிய வந்த‌து. இந்த தகவல்களை சற்றும் எதிர்பார்க்காத  பெண்ணின் உறவினர்கள் ஆத்திரத்தில் கார்த்திக்கை சரமாரியாக தாக்கினர்.

பெண்ணின் உறவினர்களிடம் இருந்து கார்த்திக்கை மீட்ட போலீசார், காவல்நிலையம் அழைத்து சென்றுவிசாரித்த‌தில், மேலும் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி,  திருமணத்தை எப்படியாவது நடத்திவிட முடிவு செய்த கார்த்திக், சினிமா பாணியில், இருவரை தன் அக்கா , மாமாவாக நடிக்க வைத்துள்ளதும் அம்பலமாகியுள்ளது. இதையடுத்து ஜெயக்குமார், வசந்தி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவல் அறிந்த பெண் வீட்டார் சிலர், காவல்நிலையத்தின் முன்பும் கார்த்திக்கை சரமாரியாக தாக்கினர். பெண்ணுக்கு அவள் விரும்பிய நபருடன் திருமணம் செய்து வைக்க,  ஆசை ஆசையாய் ஏற்பாடுகளை செய்த பெண் வீட்டார், இணையதளத்தை நம்பி ஏமார்ந்து நிற்கும்,  மகளை எண்ணி வேதனை அடைந்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்