திமுக தலைவராக ஸ்டாலின் ஓராண்டு நிறைவு... கருணாநிதி வகுத்த பாதையில் கச்சிதமாக பயணம்...

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடையும் நிலையில் அவரது சாதனைப் பயணம்....
திமுக தலைவராக ஸ்டாலின் ஓராண்டு நிறைவு... கருணாநிதி வகுத்த பாதையில் கச்சிதமாக பயணம்...
x
கருணாநிதி மறைவுக்கு பின், திமுகவை எப்படி வழி நடத்தி செல்லப் போகிறார்கள் என்று மாநிலமும் தேசியமும் பார்த்துக் கொண்டிருந்த போது, அந்த கட்சியினர் எதிர்பார்த்தது போல்  கடந்த ஆண்டு இதே நாளில் பொதுக்குழுவில் திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்டார் மு.க. ஸ்டாலின். திமுகவின் அடிமட்ட தொண்டனாக  பொதுவாழ்க்கையை தொடங்கி, இளைஞரணி செயலாளர், திமுக செயல்தலைவர் என்று கட்சிப்பணிகளில் சுழன்று வந்த ஸ்டாலின் திமுக தலைவர் பதவியையும் லாவகமாக கையாளத் தொடங்கினார். திராவிட மரபணுக்களோடு இதோ உங்கள் முன்னால் புதிதாய் பிறந்திருக்கிறேன் என்ற நம்பிக்கை வார்த்தையை பொதுகுழுவில்  விதைத்து, அதன்படி செயல்பட்டும் காண்பித்திருக்கிறார் 

அப்படி ஸ்டாலின் என்ன செய்து விட போகிறார் என்று கணக்கு போட்ட மாற்றுக் கட்சிகளுக்கு , திமுக பின்பற்றி வந்த மாநில சுயாட்சி நிலைப்பாட்டில் உறுதியாக நின்று,  மக்களுக்கான  தொடர் போராட்டங்களை நடத்தி, தோழமை கட்சிகளை அரவணைத்து சென்று கருணாநிதியின் அரசியல் வாரிசு தாம் என்பதை உறுதிப்படுத்தினார் , ஸ்டாலின். ஊராட்சி துவங்கி நகர, ஒன்றிய, பேரூராட்சி நிர்வாகிகளை நேரடியாக சந்தித்து அவர்களது மன ஓட்டத்தை அறிந்து களை எடுக்க வேண்டியவர்களை அகற்றி, புதியவர்களுக்கு பொறுப்புகளை வழங்கி  உட்கட்சி விவகாரங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். எதிர்கட்சி தான் ஆனால் எதிரிக்கட்சி அல்ல என்பதை நினைவூட்டும் வகையில் மாநில சட்டமன்றத்திலும் வெளியிலும் தமிழகம் சார்ந்த பிரச்சினைகளில் மாநில அரசுக்கு  துணை நிற்க ஸ்டாலின் தவறியதில்லை.

அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலையை நாட்டின் பிரதான எதிர்கட்சித் தலைவர்கள் முன்னிலையில் சோனியா காந்தி மூலம் திறந்து வைத்த ஸ்டாலின், முரசொலி அலுவலகத்தில் அமைக்கப் பட்ட கருணாநிதி சிலையை பாஜகவை கடுமையாக எதிர்க்கும் மம்தா பானர்ஜியை கொண்டு திறந்து வைத்து தேசிய தலைவர்கள் பட்டியலில் தன்னையும் இணைத்துக் கொண்டார். கட்சித் தலைவராக பொறுப்பேற்ற உடனே முதல்சோதனையாக, அதிலும் பெரும் சோதனையாக நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டிய கட்டாயம் எழுந்தது, மத்தியில் பாஜகவுக்கு எதிரான அணியை உருவாக்க ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடும், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவும் களமிறங்கி, சென்னைக்கே வந்து ஸ்டாலினிடம் ஆதரவு கேட்டபோது, அவர்களை அன்பால் அரவணைத்து அதே நேரம் அரசியல் ஆட்டத்துக்கு தேசிய அளவில் காங்கிரஸ் தலைமையை தேர்ந்தெடுத்து தேசிய அரசியலிலும் முத்திரை பதித்தார். 

தமிழகத்தில் அதிமுகவும் பாஜகவும் வலுவான கூட்டணி அமைத்தபோதிலும் எந்த பதட்டமும் இன்றி தன்னுடன் பல போராட்டங்களில் ஒன்றாக நின்ற தோழமை கட்சிகளுடனே நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தார் ஸ்டாலின்.. காங்கிரசுக்கு 10 இடங்களை அள்ளி தந்தும்  மதிமுக பொது செயலாளர் வைகோவுக்கு ராஜ்ய சபா எம்பிக்கான உறுதியை அளித்தும் தாராளமாக தொகுதிகளை பங்கீடு செய்து திமுகவின் நெடுநாள் நண்பர்களை தக்கவைத்துக் கொண்டார். 38 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில், 37 இடங்களில் திமுக கூட்டணிக்கு வெற்றியை தேடி தந்து , தேசிய அளவில் நாடாளுமன்றத்தில் மூன்றாவது கட்சியாக திமுகவை உயர்த்திக் காட்டினார் , ஸ்டாலின் 

நாடு முழுவதும்  இமாலய வெற்றி பெற்ற போதிலும், தமிழகத்தில் ஒரு இடம் கூட  பெற முடியாத அளவுக்கு  ஆளும் பாஜகவுக்கு அதிர்ச்சியை தந்தார் ஸ்டாலின். தனது மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞரணி செயலாளர் பதவி வழங்கிய போது வேலூர் தேர்தலில் வாரிசு அரசியல் என்ற கோஷத்தை ஆளுங்கட்சி கையில் எடுத்தது. ஆனால் அசராமல் அந்த ஆயுதத்தை வீழ்த்தி, அந்த தொகுதியில் வெற்றிக் கனியை பறித்ததன் மூலம் வாரிசு அரசியல் சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைத்தார் ஸ்டாலின். இடைத்தேர்தல் அல்லது ஓரிரு தொகுதிகளுக்கு நடத்தப்படும் தேர்தல்களில் ஆளும் கட்சி தான் வெற்றி பெறும் என்ற நிலையை மாற்றிக் காட்டினார்.

மாநில அரசியலில் மட்டுமல்ல தேசிய அரசியலிலும் ஸ்டாலின் பரிணமிக்க தவறவில்லை. முன்னேறிய வகுப்பினருக்கு கல்வி வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஓதுக்கீடு வழங்கி மத்திய அரசு சட்டம் கொண்டு வந்த போது சமூக நீதி கொள்கையில் உறுதியாக நின்று அதனை எதிர்த்த ஸ்டாலின் தபால்துறை பணியாளர் தேர்வில் இந்தி எட்டிப்பார்க்க முயன்ற போது அதனை கடுமையாக எதிர்த்தார். தமது கட்சி எம்பிக்களை நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வைத்து, அதனை தடுத்தும் நிறுத்தினார். அந்தந்த மாநில மொழிகளில் தபால் துறை பணியாளர் தேர்வு நடைபெறும் என்ற உத்தரவை மத்திய அரசு பிறப்பிக்க காரணகர்த்தாவாக ஸ்டாலின் விளங்கினார்.

ஜம்மு- காஷ்மீர்  பிரச்சனை எழுந்த போது  முதல் மாநில கட்சியாக மத்திய அரசின் , மாநில பிரிவினைக்கு எதிராக  திமுக குரல் கொடுத்தது. மாநில சுயாட்சி கொள்கையில் திமுக இன்னும் , அதே வேகத்தில் தான் உள்ளது என்பதை  டெல்லிக்கு உணர்த்திய ஸ்டாலின் , தேசிய கட்சிகள் கூட திகைத்து நின்ற போது , மாநில அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டம் நடத்தி மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து , தமது போர்க்குணத்தை வெளிப்படுத்தினார் டெல்லியில் தேசிய கட்சிகளை ஒருங்கிணைத்து காஷ்மீர் விவகாரத்துக்காக போராட்டம் நடத்தி, தமது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தி காண்பித்தார் மாநில அரசியல், தேசிய அரசியல், கலை, இலக்கியம், சமூக  செயல்பாடு ஆகியவற்றில் தொய்வின்றி சுழன்று சுழன்று பணியாற்றி இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத தலைவராக தான் வருவேன் என்பதை இந்த ஓராண்டில் உறுதி  செய்துள்ளார் , திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்..



Next Story

மேலும் செய்திகள்