"தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை, பொருட்கள் கொள்ளை : 3 பேர் கைது"

சென்னை குன்றத்தூர் அருகே பகலில் வேலைக்கு சென்று விட்டு, இரவில் ஆட்டோவில் வந்து கொள்ளை அடித்து வந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
x
குன்றத்தூர் அடுத்த இரண்டாம் கட்டளை, பெசில் கார்டன் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணய்யா... தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவர், கடந்த வாரம் வீட்டை பூட்டி விட்டு, வீட்டின் மாடியில் உள்ள சிறிய அறையில் குடும்பத்துடன் படுத்து உறங்கியுள்ளார். 

அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள், அவர் உறங்கி கொண்டிருந்த அறையின் கதவை வெளிப்புறமாக தாழ்ப்பாள் போட்டு விட்டு, வீட்டின் பூட்டை உடைத்து நகை, எல்.ஈ.டி., டி.வி., உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றுள்ளனர்.  

இதையடுத்து கிருஷ்ணய்யா அளித்த புகாரை அடுத்து, போரூர் உதவி ஆணையர் செம்பேடு பாபு, குன்றத்தூர் காவல் ஆய்வாளர் சார்லஸ் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொள்ளையர்கள் தீவிரமாக தேடி வரப்பட்டனர்.  

இந்நிலையில் கொள்ளை சம்பவம் நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில், கொள்ளையர்கள் ஆட்டோவில் வந்து சென்றிருப்பது தெரிய வந்தது. 

இதன் அடிப்படையில், ஓட்டேரியை சேர்ந்த முருகன், செல்வம், பிரான்சிஸ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் விசாரணை செய்த போது, பகலில் வேலை பார்த்துவிட்டு, இரவில் கொள்ளையில் ஈடுபடும் அதிர்ச்சி தகவல் வெளிவந்தது. 

பகல் நேரத்தில் பெயிண்டர், பந்தல் போடுதல் மற்றும் ஆட்டோ ஓட்டுதல் என தனித்தனியே வேலை செய்து வந்த மூவரும், இரவு நேரங்களில் ஒன்று சேர்ந்து ஆட்டோவை எடுத்து கொண்டு பூட்டி இருக்கும் வீடுகளை கண்காணித்து, அங்கு சென்ற திருடுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளனர்.  

போலீசாருக்கு சந்தேகம் வராமல் இருக்க ஆட்டோவில் பயணிகள் போல் இருவரை ஏற்றிக்கொண்டு ஆட்டோவில் சென்று கொள்ளை அடித்து வந்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

இதையடுத்து இவர்களிடமிருந்து 7 சவரன் நகைகள், எல்.ஈ.டி., டி.வி., பித்தளை பாத்திரங்கள், ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரையும் சிறையில் அடைத்தனர். 

பகலில் வேலை செய்து விட்டு, இரவில் கொள்ளை அடித்து வரும் கும்பல் கைது செய்யப்பட்ட  சம்பவம், குன்றத்தூர் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்