வெளிநாடுகளில் உள்ள தமிழக கோயில் சிலைகள் : "தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கவில்லை" - பொன். மாணிக்கவேல் குற்றச்சாட்டு

தமிழக கோயில்களில் திருடப்பட்ட சிலைகள் வெளிநாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டும், அங்கிருந்து தமிழகம் கொண்டு வருவதற்கான விமான கட்டணங்களை தமிழக அரசு அதிகாரிகள் வழங்காமல் தாமதப்படுத்துவதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.
வெளிநாடுகளில் உள்ள தமிழக கோயில் சிலைகள் : தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கவில்லை - பொன். மாணிக்கவேல் குற்றச்சாட்டு
x
தமிழகத்தில் பல்வேறு கோயில்களிலிருந்து திருடப்பட்ட சுமார் 20 சிலைகள் வெளிநாடுகளில் இருப்பதை, பொன்.மாணிக்கவேல் தலைமையில் செயல்பட்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கண்டுபிடித்தது. ஆனால் அந்த சிலைகளை தமிழகத்துக்கு கொண்டு வருவதற்கான, போக்குவரத்து கட்டணங்களை அரசு அதிகாரிகள் தராமல் இழுத்தடிப்பதாக சொல்லப்படுகிறது. தமிழகத்தில் இருந்த கடத்தப்பட்ட சிலைகள் வெளிநாடுகளில் குறிப்பாக ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவில் இருப்பதைக் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு தலைவராக இருந்த போது பொன்.மாணிக்கவேல் கண்டுபிடித்து, அதைக் கொண்டு வருவதற்கான ஒப்புதல்களை பெற்றிருக்கிறார். தற்போது பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்ற உத்தரவின்படி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். 

பத்து மாதங்களுக்கு முன்பு, அதாவது அவர் சிலைகடத்தல் தடுப்புப் பிரிவின் ஐ.ஜி.யாக இருந்தபோது, அப்போதைய தமிழக டிஜிபி டிகே.ராஜேந்திரனுக்கு, கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில், வெளிநாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட சிலைகளை தமிழகம் கொண்டு வரத் தேவையான நிதியை ஒதுக்கும்படி கோரிக்கை விடுத்திருக்கிறார். 36 வருடங்களாக தமிழகத்தில் இருந்து திருடப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகளை மீட்க முடியவில்லை என கடிதத்தில் குறிப்பிட்ட பொன்.மாணிக்கவேல், தற்போது அவைகளை மீட்க வாய்ப்பு இருக்கும் போது, அதற்கு உங்களுக்கு இஷ்டம் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். பொன்.மாணிக்கவேல் கடிதங்களை அரசுக்கு அனுப்பி உள்ளதாக டி.கே.ராஜேந்திரன் அவருக்கு பதில் அளித்திருக்கிறார். 

இந்த விவகாரம் தொடர்பாக உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டிக்கும் பொன்.மாணிக்கவேல் கடிதம் எழுதியிருக்கிறார். இதுதொடர்பாக நடவடிக்கை இல்லாத பட்சத்தில் நீதிமன்றத்தை அணுகவும் சிறப்பு புலனாய்வுக்குழு முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. இதனிடையே, எந்தெந்த சிலைகள் எந்தெந்த நாடுகளில் உள்ளது அவை எந்தக் கோயில்களிலிருந்து காணாமல் போனவை என்ற தகவல்களும் தற்போது வெளியாகியுள்ளன. 1982ம் வருடம் நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி கோயிலிலிருந்து நான்கு சிலைகள் மாயமாகின. ஆனால் அது பற்றிய எந்த புகாரும் பதிவாகவில்லை. 1984ம் ஆண்டில் சிலைகள் காணாமல் போனது தொடர்பாக கண்டுபிடிக்க முடியவில்லை என கீழமை நீதிமன்றத்தில் வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. 

அதன்பிறகு பொன்.மாணிக்கவேல் தலைமையில், சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு களம் இறங்கியபோது, காணாமல் போனவை, நடராஜர், அறம் வளர்த்த நாயகி, காரைக்கால் அம்மையார், மாணிக்கவாசகர் ஆகிய நான்கு சிலைகள் என்பது தெரிய வந்தது. இன்னொரு பக்கம் திருச்சி பாலக்கரையில் ஒரு அம்மன் சிலை கண்டுபிடிக்கப்பட்டு அதுதான் கல்லிடைக்குறிச்சி சிலை என சிலர் கோயிலில் வைக்க முயற்சிக்க, அதை அந்தப் பகுதி மக்கள் பலமாக எதிர்க்க அந்த முயற்சி கைவிடப்பட்டது. தற்போது கல்லிடைக்குறிச்சியில் காணாமல் போன நான்கு சிலைகளில், நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவுக்கு பல கோடிகளுக்கு விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

ஆஸ்திரேலியாவின் அடிலைட் நகரில் இருக்கும் அந்த சிலை கல்லிடைக்குறிச்சி கோயில் சிலை என்பதை நிரூபித்த பொன்மாணிக்கவேல், அதை திரும்ப  பெறும் முயற்சிகளில் இறங்கி வெற்றியும் பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. அடிலைட் நகரில் உள்ள கண்காட்சிக் கூட நிர்வாகமும் சிலைகளை திரும்ப ஒப்படைக்கவும் முன்வந்துள்ளது. இதற்காக நீண்ட சட்டப்போராட்டம் நடத்தியிருக்கிறது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு. அதே கல்லிடைக்குறிச்சி கோயிலில் காணாமல் போன மற்ற மூன்று சிலைகள் அமெரிக்காவுக்கு விற்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதே போல நாகப்பட்டினத்துக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு கோயிலிலிருந்து காணாமல் போன செம்பியன்மாதேவி சிலையையும் பொன்மாணிக்கவேல் கண்டுபிடித்துள்ளார். இந்த சிலை நூறு கோடிகளுக்கும் மேல் விலை பேசப்பட்டு விற்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த சிலையையும் தமிழகத்துக்கு திருப்பித் தர சம்பந்தப்பட்டவர்கள் தயாராக இருக்க தமிழக அரசு அதிகாரிகளிடம் இருந்து தகுந்த பதில் இல்லை என சொல்லப்படுகிறது. 

வெளிநாடுகளில் இருக்கும் சிலைகளை தமிழகம் கொண்டு வருவது யார் பொறுப்பு என்ற கேள்வி எழும்போது கூடவே இன்னொரு கேள்வியும் எழும். அதாவது சிலைகளுக்கு சொந்தக்காரர்கள் யார் என்பதுதான் அந்தக் கேள்வி. ஆஸ்திரேலியாவில் உள்ள சிலைகளை தவிர தமிழகத்தில் இருந்து திருடப்பட்ட சிலைகள் அமெரிக்காவிலும் உள்ளதை சிறப்பு புலனாய்வு குழு கண்டுபிடித்துள்ளது. அவை தமிழக கோவில்களில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது என்பதை நியூயார்க் ஹோம்லேண்ட செக்யூரிட்டி இன்வெஸ்டிகேசன் என்ற அமைப்பு தெளிவுபடுத்தியுள்ளது. இதன் அடிப்படையில் அந்த அமைப்பின் புலன் விசாரணை அதிகாரியான BRANDEN EASTER மற்றும் அதன் வழக்கறிஞர் மேத்யூ தங்கள் வசம் உள்ள சிலைகளை அவர்களே கொண்டு வந்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து சாட்சி சொல்லவும் தயாராக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. 

இவர்களுக்கான பயண செலவையும், இங்கே தங்கும் செலவையும் அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஒரு உத்தரவாத கடிதத்தை தான் சிறப்பு புலான்யுவ குழு, தமிழக அரசு அதிகாரிகளிடம் எதிர்பார்த்து காத்திருக்கிறது. அதே சமயம், கும்பகோணத்தில் இருந்து செயல்படும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவிற்கு தேவையான வசதிகள் செய்து தரப்படவில்லை என்பதும் கூடுதல் வேதனை. இவரது பணிக்காக நீதிமன்றம் பெரும் தொகையை சம்பளமாக நிர்ணயித்து உத்தரவிட, அதை வேண்டாம் என மறுத்து பணியில் இருக்கிறார், பொன். மாணிக்கவேல்.. மொத்த சிலைகளையும் மீட்டு கொண்டு வர, 9 சிறப்பு வழக்கறிஞர்கள்  தேவை என்ற கோரிக்கையும் இது வரை ஏற்கடப்பவில்லை. 

தமிழக அரசோடு மத்திய அரசும் இந்த விவகாரத்தில் தீவிர கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என சொல்லும் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர், கடந்த எட்டு வருடங்களாக தமிழக சிறைகளில் சிலைகளைக் கடத்திய வழக்குகளில் கைதான வெளிநாட்டினர் பலர் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். இவர்களைப் பார்த்து, இனி சிலை திருடப் போனால் சிறை நிச்சயம் என மற்ற சிலை கடத்தல்காரர்களும், தமிழகத்தின் பக்கம் தலை காட்ட மாட்டார்கள் என்று சொல்கிறார்கள் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர். திரைப்படங்களில் காவல்துறை அதிகாரிகளாக வலம் வந்து அதிரடி கிளப்பும்  சிங்கங்களையும், சாமிகளையும் கொண்டாடத் தவறாத நாம், நிஜத்தில் அதிரடி காட்டும் சிங்கம், மற்றும் சாமிகளை கண்டு கொள்கிறோமா என்ற கேள்விக்கு பதில் சொல்லப் போவது யார்?

Next Story

மேலும் செய்திகள்