டிக் டாக் வீடியோ விபரீதம் - இளைஞர் தற்கொலை

திருத்தணி அருகே டிக் டாக் விபரீதம் காரணமாக இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
டிக் டாக் வீடியோ விபரீதம் - இளைஞர் தற்கொலை
x
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே கார்த்திகேயபுரம் அருகே உள்ள ஓடையில், 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தாழவேடு கிராமத்தை சேர்ந்த வெங்கடராமன் என்று தெரிய வந்தது. இவர் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி தனது நண்பர் விஜி என்பவருடன் சேர்ந்து டிக் டாக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு குறிப்பிட்ட சமூக மக்களை அவதூறாக சித்தரித்து வீடியோ வெளியிட்டதாகவும், எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த நிலையில் தான் தனது நண்பர் விஜியை கழுத்தை நெறித்து கொலை செய்த வெங்கட்ராமன் பிப்ரவரி 22ஆம் தேதி காவல்நிலையத்தில் சரணடைந்தார். இவர் மீது கொலை வழக்கு, டிக் டாக்கில் அவதூறு வழக்கு உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வழக்கு நடந்து வருகிறது. தற்போது ஜாமீனில் வெளியே வந்த வெங்கட்ராமன், தனக்கு அதிக தண்டனை கிடைக்கும் என்ற பயத்தில் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இவரது மரணம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்