பேனர் வழக்கு : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

சட்டவிரோத பேனர்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கோரிய அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
x
சட்டவிரோத பேனர்களை அகற்ற பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தவில்லை என கூறி, டிராபிக் ராமசாமி அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் நிர்மல் குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டவிரோத பேனர்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசு, ஒரு வாரம், கால அவகாசம் கோரியது.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், தமிழக அரசு, தொடர்ந்து கால அவகாசம் கோருவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இது போன்ற கால அவகாசம் கேட்டால், உள்துறை செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரித்தனர். சாதாரண மனிதர்கள் தவறு செய்தால் தண்டனை வாங்கிக் கொடுக்கும் அரசு, அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் காலஅவகாசம் கோருவது ஏன் என கேள்வி எழுப்பினர்.

அரசின் செயல்பாடு, மனுதாரரிடம் நீதிமன்றம் மன்னிப்பு கோரும் நிலையை ஏற்படுத்திவிட்டது என்று வேதனை தெரிவித்த நீதிபதிகள், கால அவகாசம் வழங்க முடியாது என தெரிவித்தனர். மேலும், அரசு தலைமை வழக்கறிஞர் நாளை நேரில் ஆஜராகி சட்டவிரோத பேனர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்