நீட் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட மாணவிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதா? - சென்னை உயர்நீதிமன்றம்
நீட் தேர்வில் தோல்வியடைந்து தற்கொலை செய்து கொண்ட மாணவிகள் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதா என்கிற விவரத்தினை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வு தோல்வியால் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, மாணவ - மாணவிகளுக்கு அகில இந்திய போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் பயிற்சி அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல உத்தரவுகளை நீதிபதி கிருபாகரன் பிறப்பித்திருந்தார். இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை என தமிழக அரசுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு, நீதிபதி கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்த நிலையில், நீட் தேர்வு தோல்வியால் தமிழகத்தில் மேலும் சில மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், தமிழக அரசு உரிய பயிற்சி அளிக்கவில்லை என்றும் மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, மாணவிகளின் தற்கொலை விவரங்களையும், அந்த குடும்பங்களுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்கியுள்ளதா? என்பது குறித்த விவரங்களையும் அறிக்கையாக 2 வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.
Next Story