கோபத்தால் நடந்த கொடூர கொலை: சாலையில் நடந்து சென்ற இளைஞர் குத்தி கொலை

ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்த இளைஞர், எந்தவித சம்பந்தமும் இன்றி சாலையில் சென்று கொண்டிருந்த ஒருவரை குத்தி கொலை செய்த சம்பவம் சென்னை அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோபத்தால் நடந்த கொடூர கொலை: சாலையில் நடந்து சென்ற இளைஞர் குத்தி கொலை
x
சென்னை சோழிங்கநல்லூரை அடுத்த கண்ணகி நகரில் வசிக்கும் விஜய் மற்றும் சுதாகர், கடந்த சனிக்கிழமை  இரவு எழில் நகர் பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது அப்பகுதி இளைஞர்கள் ஐந்து பேர் கஞ்சா புகைப்பதை பார்த்து அதை தட்டி கேட்டுள்ளனர். இதனால் போதையில் இருந்த இளைஞர்கள், விஜய் மற்றும் சுதாகரை திட்டியதாக கூறப்படுகிறது. 

இதனால் கோபத்துடன் வீட்டிற்கு சென்ற விஜய், ஆத்திரம் குறையாமல் கையில் கத்தியை எடுத்துக்கொண்டு தனது தந்தை மற்றும் சுதாகருடன் அப்பகுதிக்கு மீண்டும் சென்றுள்ளார். அங்கு அந்த இளைஞர்கள் இல்லாததா​ல், விரக்தி அடைந்த விஜய் அப்பகுதியில் நின்றிருந்த ஆட்டோவின் கண்ணாடியை உடைத்துள்ளார். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மகாலட்சுமி என்பவர் கேள்வி கேட்டபோது, அவரது கை மற்றும் காலில் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. 

அத்தோடு நின்றுவிடாமல் சாலையில் சென்று கொண்டிருந்த சதீஷ் என்பவரையும் விஜய் கத்தியால் குத்தியதாக சொல்லப்படுகிறது. இதில் குடல் சரிந்த நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக  சதீஷ் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சதீஷ் உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார் விஜய், சுதாகர், கருணாநிதி ஆகிய மூவரையும் கைது செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

யாரோ மேல் இருந்த கோபத்தை, சாலையில் சென்று கொண்டிருந்த ஒருவர் மீது காட்டி, அவரை குத்தி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்