"ஆண் வாரிசு இல்லை என கணவர் அடித்து துன்புறுத்துகிறார்" : கலெக்டர் அலுவலகத்தில் பெண் தஞ்சம்
ஆண் வாரிசு இல்லை என கூறி கணவர் தன்னை சித்ரவதை செய்வதாக கூறிய பெண் ஒருவர் தன் 3 பெண் குழந்தைகளுடன் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த சொர்ணலட்சுமி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு முத்துக்குமார் என்பவரை காதல் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் சொர்ணலட்சுமி குடும்ப கட்டுப்பாடு செய்துள்ளார். ஆனால் தனக்கு ஆண் வாரிசு இல்லை என்பதால் ஆத்திரமடைந்த முத்துகுமார் தனது மனைவியை தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார். மேலும் மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்து விடுவதாக முத்துகுமார் மிரட்டியதால் பயந்து போன சொர்ணலட்சுமி, தன் குழந்தைகளை கல்லிடைக்குறிச்சியில் உள்ள தன் தாய் வீட்டில் விட்டு வளர்த்து வந்தார். அங்கு சென்றும் முத்துகுமார் பிரச்சினை செய்ததால் பயந்து போன சொர்ணலட்சுமி தன் 3 பெண் குழந்தைகளோடு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தார். நன்றாக படிக்கும் தன் குழந்தைகளின் நலன் கருதி, தற்கொலை முடிவை பலமுறை கைவிட்டதாக கூறிய அவர், தங்களுக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என கண்ணீர் மல்க கூறினார்.
Next Story