நீதிமன்ற வளாகம் அருகே துணிகரம் - ஜாமினில் வெளிவந்தவர்களுக்கு அரிவாள் வெட்டு...

கோவையில் நிபந்தனை ஜாமினில் வெளிவந்தவர்கள், நீதிமன்ற வளாகத்திற்கு அருகே அரிவாளால் வெட்டபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
x
கோவை காமராஜர் நகரை சேர்ந்தவர்கள் பிரதீப் மற்றும் தமிழ்வாண‌ன்... இருவரும் அடிதடி வழக்கில் கைதாகி நிபந்தனை ஜாமினில் வெளிவந்துள்ளனர். இந்த நிலையில், இருவரும் வழக்கம் போல கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு விட்டு, அவினாசி சாலையில் சென்றுள்ளனர்.  அப்போது இருசக்கரவாகனத்தில் அவர்களை பின்தொடர்ந்த 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று, அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளது. இதில் அந்த பகுதி சாலையில், அருகில் இருந்த இருசக்கரவாகனத்தில் என பல இடங்கிளில் ரத்தம் வழிந்தோடியது... பிரதீப்பும், தமிழ்வாண‌னும் நிலை குலைந்து விழுந்த நிலையில், கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்றுள்ளது அந்த மர்ம கும்பல் . பட்ட பகலில், நீதிமன்ற வளாகத்திற்கு அருகே அரங்கேறிய இந்த பயங்கரத்தால், அங்கிருந்த மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.  தகவல் அறிந்து வந்த போலீசார், உயிருக்கு போராடிகொண்டிருந்த பிரதீப் மற்றும் தமிழ்வாண‌னை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன் பிரதீப் மற்றும் தமிழ்வாண‌ன், எதிர்தரப்பை சேர்ந்த ஒருவரை கொல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அந்த வழக்கில் தான் இருவரும் நிபந்தனை ஜாமினில் வெளிவந்துள்ளனர். எனவே அந்த சம்பவத்திற்கு பழிதீர்க்கும்விதமாகவே இந்த தாக்குதல் அரங்கேறியுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. சம்பவம் தொடர்பாக, சதீஷ், ஹரி, தனபால், சூர்யா ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்