300 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் - ஓய்வுபெறும் நிலையில் உள்ளவர்கள் பீதி...

ஆசிரியர் பயிற்சி தேர்வு விடைத்தாள்களில் முறைகேடு செய்த விவகாரம் தொடர்பாக, 300 ஆசிரியர்களுக்கு ஆசிரியர் கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
x
கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ஆசிரியர் பயிற்சிக்கான முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வுகள் நடத்தப்பட்டன. 15 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற இந்த தேர்வில், 12 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்களின் விடைத்தாள்களில், அசல் மதிப்பெண்களுக்கு பதிலாக, முறைகேடாக தேர்ச்சிக்குரிய 50 மதிப்பெண்கள் போடப்பட்டு இருந்ததை, தேர்வுத்துறை கண்டுபிடித்தது. இதன் பிறகு, விடைத்தாள்கள் முழுமையாக மீண்டும் மறுமதிப்பீடு செய்யப்பட்டு, தேர்வு முடிவுகள் வெளியிட்டப்பட்டன. இந்த விவகாரத்தில், சம்பந்தபட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித்துறைக்கு, தேர்வுத்துறை பரிந்துரை செய்திருந்தது. இதன் அடிப்படையில், அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளை சேர்ந்த 188 ஆசிரியர்கள், தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளி ஆசிரியர்கள் 112 பேர் என, 300 ஆசிரியர்களுக்கு, 17-பி பிரிவின் கீழ் நோட்டீஸ் அனுப்பி, ஆசிரியர் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தனியார் பள்ளி ஆசிரியர்கள் மீது, சம்பந்தபட்ட பள்ளி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசு பள்ளி ஆசிரியர்கள் 188 பேருக்கும் சம்பள உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்டவை நிறுத்தப்படும் எனவும், ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு, முழுமையான பணப் பலன்கள் வழங்கப்படாது எனவும் தெரிவித்துள்ள அதிகாரிகள், உடனடியாக விசாரணை துவங்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்