மாணவியை ஆபாசமாக சித்தரித்த இளைஞன்... ஆசைக்கு மறுத்தால், இணைய​த்தில் வெளியிடுவேன் என மிரட்டல்

புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டியதால், 10ஆம் வகுப்பு மாணவி தீயிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
x
* ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அடுத்த தேவம்பாளையம் பகுதியில் உள்ள கிராமத்தில் ஏழைக் குடும்பத்தை சேர்ந்த சிறுமி, அதேபகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். படிப்பில் படுசுட்டியாக இருந்த மாணவி, தோழி எடுத்த செல்பி புகைப்படத்திற்கு மகிழ்ச்சியாக போஸ் கொடுத்தார். மாணவி மகிழ்ச்சியாக இருக்கும் அந்தப் புகைப்படம், ஏழை மாணவியின் வாழ்வுக்கே முடிவு கட்டும் என்பது யாரும் அறியாத பயங்கரம்...

* பல்வேறு செல்போன்களுக்கு பகிரப்பட்ட அந்தப் புகைப்படம்,  அதே பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞன் நந்தகுமார் கையில் சிக்கியது. எல்லோரையும் போல இல்லாமல், புகைப்படத்தை ஆபாச கண்கொண்டு பார்த்த அவன், மாணவியின் புகைப்படத்தை மட்டும் தனியாக பிரித்து தன்னுடன் இணைத்து சித்தரித்துள்ளான். வன்மம் நிறைந்த அந்த புகைப்படத்தை மாணவிக்கு காட்டிய நந்தகுமார், தமது ஆசைக்கு இணங்குமாறும், மறுத்தால், புகைப்படத்தை மோசமாக சித்தரித்து இணையத்தில் வெளியிடுவேன் என்றும்  செல்போன் மூலம் மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது.

* படபடத்துப் போன மாணவி தமது தாயிடம் சம்பவத்தை கூற, பதைபதைக்கும் மனதுடன் இளைஞர் நந்தகுமாரின் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்த நேரத்தில் தனியாக இருந்த மாணவி, மன உளைச்சல் காரணமாக, வீட்டிலிருந்த மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளித்தார். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், தீயை அணைத்தனர். உடல் முழுதும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

* மாணவியை மிரட்டிய நந்தகுமாரை போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளில் கைது செய்த போலீசார், கொடுமுடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். துள்ளி துரிந்த சிறுமி தீக்கிரையாகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 



Next Story

மேலும் செய்திகள்