வயிற்றில் தலையணையை கட்டி கொண்டு கர்ப்பிணி என கூறி கணவனை ஏமாற்றிய பெண்
வயிற்றில் தலையணையை கட்டிக் கொண்டு கர்ப்பமாக இருப்பது போல் நடித்து கணவன் மற்றும் உறவினர்களை பெண் ஒருவர் ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது
வயிற்றில் தலையணையை கட்டிக் கொண்டு கர்ப்பமாக இருப்பது போல் நடித்து கணவன் மற்றும் உறவினர்களை பெண் ஒருவர் ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை சூளை பகுதியை சேர்ந்தவர் சுதாகர். இருசக்கர வாகன மெக்கானிக்காக பணிபுரிந்து வரும் இவருக்கும் இவரது அக்காள் மகள் காயத்ரிக்கும் கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் ஆனதில் இருந்து கருத்தரிக்காமல் இருந்து வந்த காயத்ரி சமீபத்தில் கர்ப்பமானதாக கூறியுள்ளார். இத்தனை ஆண்டுகள் கழித்து குழந்தை பிறக்கப் போகிறது என்ற மகிழ்ச்சியில் சுதாகரின் குடும்பம் இருந்தது...
காயத்ரிக்கு கடந்த 14 ஆம் தேதி பிரசவத்திற்கான தேதி கொடுக்கப்பட்டிருந்த நிலையில் மருத்துவமனைக்கு சென்ற அவர், மீண்டும் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. பல இடங்களில் தேடியும் காயத்ரியை காணாததால் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் சோதனை நடத்தி வந்த நிலையில், காயத்ரி தன் கணவர் சுதாகரை தொடர்பு கொண்டு, யாரோ ஒருவர் தன்னையும் குழந்தையையும் கடத்தி வந்ததாக கூறியுள்ளார். மயக்க மருந்து கொடுத்து தன்னை ஒரு நபர் கடத்தி வந்ததாகவும். கண் விழித்து பார்த்த போது திருத்தணியில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து காயத்ரியை மீட்ட போலீசாருக்கு அவர் மீதே மீண்டும் சந்தேகம் திரும்பியது. மருத்துவமனையில் அவர் வேக வேகமாக நடந்து சென்ற காட்சிகள் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும் குழந்தை பெற்றதற்கான அறிகுறியும் காயத்ரியிடம் இல்லாததால் சந்தேகமடைந்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது தான் காயத்ரி நடத்திய கடத்தல் நாடகமும், கர்ப்பிணியாக நடித்த தகவலும் வெளியானது.
தைராய்டு பிரச்சினையால் கருத்தரிக்காமல் இருந்து வந்த காயத்ரி தன் குறையை மறைக்கும் விதமாக கருத்தரிப்பதாக கூறி குடும்பத்தை நம்ப வைத்துள்ளார். வயிற்றில் தலையணையை வைத்து கட்டிய அவர், ஒவ்வொரு முறை மருத்துவமனைக்கு செல்லும் போதும் தனியாகவே சென்று வந்துள்ளார். ஆனால் நாட்கள் நெருங்க நெருங்க பயந்து போன அவர், தன்னையும் தன் குழந்தையையும் கடத்தி விட்டதாக கூறி நாடகமாடியுள்ளார். தன் மனைவி கருவுற்ற மகிழ்ச்சியில் இருந்த சுதாகர், அவரின் கடத்தல் நாடகத்தை அறிந்து அதிர்ச்சியுற்றார். இதையடுத்து காயத்ரிக்கு உரிய மனநிலை சிகிச்சை அளிக்க திட்டமிட்ட போலீசார் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
Next Story