20 தொகுதிகளில் இடைத்தேர்தல் எப்போது ? - தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் விளக்கம்

20 தொகுதி இடைத்தேர்தல் எப்போது ? என்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தந்தி டிவிக்கு அளித்த பிரத்தியேக பேட்டியை பார்போம்...
x
புயல் காரணமாக 20 தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்தால் அதை தேர்தல் ஆணையம் பரிசீலிக்கும். கஜா புயல் சீரமைப்புக்கு பின்னரே இடைத்தேர்தல் நடத்தப்படும் எனவும் தமிழக அரசு கடிதம் எழுதவில்லை என்றால் தேர்தல் ஆணையமே கருத்து கேட்கும், இடைத்தேர்தல் தொடர்பாக பதிலளிக்க 24 மணிநேரம் கால அவகாசம் தமிழக அரசுக்கு வழங்கப்படும் என தந்தி டிவியின் பிரத்தியேக பேட்டியில் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார். 

20 தொகுதி இடைத்தேர்தல் எப்போது?

கேள்வி - புயல் பாதிப்புகளை மத்திய குழு ஆய்வு செய்து வருகிறது. பாதிப்புகள் கடுமையாக இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். தற்போதைய சூழலில் வரும் மாதங்களில் தமிழகத்தில் இடைத்தேர்தலை நடத்துவது சாத்தியமா?

பதில் - எப்போது தேர்தல் தேதி குறித்து ஆலோசித்தாலும், திருவிழாக்காள், இயற்கை பேரிடர்கள், பொதுத்தேர்வுகளை உள்ளிட்டவற்றை கணக்கிட்டே முடிவு செய்வோம். புயல் பாதிப்பு ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில், பாதிப்புகள் குறித்து ஆராய்ந்த பின்னரே இடைத்தேர்தல் குறித்து முடிவு செய்யப்படும்.

கேள்வி - 20 தொகுதி இடைத்தேர்தல், 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே நடத்தப்படும் என கூறியிருந்தீர்கள். தற்போது புயல் பாதிப்புக்கு பிறகு, அது சாத்தியமா?

பதில் - இப்போதே அதை சொல்ல முடியாது. ஏனென்றால், 15 நாட்களில் எல்லாம் சரியாகிவிடலாம். அரசமைப்பின் படி, 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும். இடைத்தேர்தல் நடத்துவதற்கு முன்பு இதையெல்லாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

கேள்வி - தமிழக அரசு அதிகாரிகளிடம் பேசிய போது, சீரமைப்பு பணிகளுக்கு 4 மாதங்களாவது ஆகும் என கூறுகிறார்கள்.

பதில் - இது குறித்து தமிழக அரசு அறிக்கை அனுப்பட்டும்.

கேள்வி - தமிழக அரசின் அறிக்கைக்காக தேர்தல் ஆணையம் காத்திருக்குமா...

பதில் - இல்லை. இடைத்தேர்தல் குறித்து முடிவெடுக்கும் போது  நாங்கள் கோருவோம். 24 மணிநேரத்திற்குள் தமிழக அரசு அறிக்கை அளித்தாக வேண்டும்.

கேள்வி - இடைத்தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பாக கடந்த முறை தேர்தல் ஆணையத்துக்கு, தமிழக அரசு தாமதமாக கடிதம் அனுப்பியதாக கூறப்படுகிறதே...

பதில் - தாமதம் எதுவும் இல்லை. முதலில் தொலைபேசியில் தமிழக அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அடுத்த 3 மணிநேரத்தில் அறிக்கை கிடைத்துவிட்டது.

கேள்வி - புயல் பாதிப்பை மனதில் வைத்து தேர்தல் ஆணையம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்குமா...

ஒ.பி.ராவத் - தேர்தல் ஆணையம் எப்போதுமே தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்காது. எப்போதுமே, களத்தில் இருந்து தான் தேர்தல் ஆணையம் தகவல்களை கோரும். ஏனென்றால், களத்தில் இருப்பவர்கள் அவர்கள் தான். 

கேள்வி - லட்சணக்கான மக்கள் தந்தி டிவி மூலம் பார்த்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

பதில் - கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வருந்துகிறேன். இறைவனை பிரார்த்திக்கிறேன். விரைவில் இயல்புநிலைக்கு திரும்ப வேண்டும். இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் போது தங்கள் துன்பங்கள் எல்லாம் மறந்து, ஜனநாயகத்தை வலுப்படுத்த வாக்களிக்க வேண்டும்

கேள்வி - 20 தொகுதிகளில் இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என தமிழக அரசு கடிதம் எழுதினால், தேர்தல் ஒத்திவைக்கப்படுமா...

ஒ.பி.ராவத் - யூகத்தின் அடிப்படையில் கேள்விகளை கேட்க வேண்டாம். அப்படி அறிக்கை வந்தால், அது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்

கேள்வி - தற்போதைய சூழலில், தேர்தல் ஆணையத்தால் எதையும் உறுதி செய்யமுடியாது. தமிழக அரசு அறிக்கை அனுப்பினால் அதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என எடுத்து கொள்ளலாம்.

பதில் - தமிழக அரசு தானாக அறிக்கை அனுப்பாவிட்டால், தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்கும்.


Next Story

மேலும் செய்திகள்