ஆலங்குடி வட்டாட்சியரை சிறைபிடித்த மக்கள் : பயிர் சேத விவரத்தை கணக்கீடு செய்வதில் முரண்பாடு
ஆலங்குடி அருகே, கஜா புயல் சேதங்களை முறையாக கணக்கீடு செய்யவில்லை என கூறி, வட்டாட்சியரை பொது மக்கள் சிறைபிடித்ததால் அங்கு பதற்றம் நிலவியது.
* புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம், கீரமங்கலத்தில் புயலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட ஆலங்குடி வட்டாட்சியர் ரெத்தனாவதி தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள் சென்றனர்.
* புயல் பாதிக்கப்பட்டு இரண்டு நாள் கழித்து தாமதமாக ஆய்வு பணிக்கு வந்ததாக கூறி, வட்டாட்சியர் வாகனத்தை சிறைபிடித்து அப்பகுதி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். தகவலறிந்து வட்டாட்சியரை மீட்க சென்ற டி.எஸ்.பி. அய்யனார் தலைமையிலான போலீசாருக்கும், பொது மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் காயமடைந்த டி.எஸ்.பி. அய்யனார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
* புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலர் ராமசாமி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார், திருவரங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர், ஆலங்குடி வட்டாச்சியர், ஆலங்குடி துணை கண்காணிப்பாளர் ஆகியோரின் வாகனங்களை பொதுமக்கள் தீ வைத்து கொளுத்தியதாக கூறப்படுகிறது.
* ஆலங்குடியில் திருச்சி சரக டிஐஜி லலிதா லட்சுமி மற்றும் திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட போலீசார் துப்பாக்கிகளுடன் குவிக்கப்பட்டனர். ஒரு மணி நேரத்திற்கு பின், போலீசார் அனைவரும் புதுக்கோட்டைக்கு திரும்பினர்
Next Story